வயலிலிருந்து எட்டிப் பார்த்த மாமூத் யானையின் விலா எலும்பு!
மிச்சிகன்: அமெரிக்கவின் மிச்சிகன் மாகாணத்தில் ஒரு விவசாயி தனது வயலைத் தோண்டிக் கொண்டிருந்தபோது மண்ணுக்குள் புதைந்திருந்த அந்தக் காலத்து மாமூத் யானையின் பெரிய சைஸ் எலும்பைக் கண்டுபிடித்துள்ளார். முதலில் இதை தனது வயலின் எல்லைப் பகுதியில் முன்பு நட்டு வைத்து புதைந்து போன வேலி என்று அவர் நினைத்துள்ளார். ஆனால் முழுமையாக தோண்டி எடுத்த பின்னர்தான் இது மெகா சைஸ் எலும்பு என்று தெரிய வந்து ஆச்சரியமடைந்தார்.
அந்த விவசாயியின் பெயர் ஜேம்ஸ் பிரிஸ்டில். இவர் லிமா என்ற நகரில் வசித்து வருகிறார். இவர் சோயாபீன்ஸ் விளைச்சலை மேற்கொண்டுள்ளார். சம்பவத்தன்று தனது வயலை சீர்படுத்த வேண்டி அதை தனது நண்பருடன் சேர்ந்து அதைத் தோண்டினார். அப்போது பெரிதாக ஏதோ மண்ணுக்குள் புதைந்திருந்தது தெரிய வந்தது.

முன்பு வயல் எல்லைப் பகுதியில் நட்டு வைத்து பின்னர் கீழே விழுந்து விட்ட எல்லைக் கம்பியாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த அவர் அதைத் தோண்டி எடுக்க முயற்சித்தார். ஆனால் வெளியில் எடுக்க முடியவில்லை. மிகப் பெரிதாகவும் அது தோன்றியது. இதனால் சந்தேகமடைந்த அவர் கிரேனை வரவழைத்தார். கிரேனை வைத்து அதை வெளியே எடுத்த மிகப் பெரிய எலும்பு போல அது காணப்பட்டது. இதனால் பிரிஸ்டில் அதிர்ச்சி அடைந்தார்.
அளவில் மிகப் பெரியதாக இருந்ததால் அவர் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். ஆய்வாளர்கள் வந்து பார்த்து அது ஒரு காலத்தில் பூமியில் உலவிக் கொண்டிருந்த மிகப் பெரிய சைஸ் யானையான மாமூத் யானையின் எலும்பாக இருக்கலாம் என்று கூறினர். இதைக் கேட்டு பிரிஸ்டில் ஆச்சரியமடைந்தார்.
இந்த எலும்பானது அந்த யானையின் விலா எலும்பு என்று கருதப்படுகிறது. இந்த எலும்பை பலரும் கூடி வேடிக்கை பார்த்தனர். பிரிஸ்டிலின் பேரன் எலும்பைப் பார்த்து ரொம்பவே ஆச்சரியமடைந்தானாம்.
இந்த எலும்பு குறித்து மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் டேணியல் பிஷர் கூறுகையில், இது மாமூத் யானையின் விலா எலும்புப் பகுதிதான். கிட்டத்தட்ட 11,000 முதல் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இது இறந்திருக்கலாம் என்றார் அவர்.
10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மாமூத் யானைகள் பூமியை விட்டு அழிந்து விட்டன. மிகப் பெரிய உருவத்துடன், உடல் முழுவதும் ரோமம் அடர்ந்து இவை காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications