பனிப்புயலால் அவசரமாக ஜப்பானில் தரை இறங்கிய அமெரிக்க விமானம் – உயிர்தப்பிய பயணிகள்
டோக்கியோ: அமெரிக்க விமானத்தினை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் அவசர அவசரமாக அவ்விமானம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவிலிருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்ட அமெரிக்கா ஏர்லைன்சிற்கு சொந்தமான போயிங் 777-200 விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த சூழலினால் விமானத்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் காயமடைந்தவர்கள் தற்பொழுது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்கொரியாவிலிருந்து புறப்பட்டு ஜப்பானை நெருங்கிய பொழுது கடுமையான பனிப் புயலொன்று விமானத்தை தாக்கியதால் விமானம் நிலைகுலைந்து போயிருந்ததாக அதில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து விமானியின் பெரும் முயற்சியால் விமானம் தரையிறக்கப்பட்டதாலேயே தாங்கள் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாக பயணிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் நான்கு பயணிகள் மற்றும் ஒரு விமான பணியாளர் டோக்கியோ வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த விமானத்தில், 240 பயணிகளும், 15 விமான பணியாட்களும் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.