ஈரான்தான் தீவிரவாதிகளை வளர்க்கிறது... அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
உலக அளவிலான தீவிரவாதிகளை உதவிகள் பல செய்து ஈரான் நாடுதான் வளர்க்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
ஜெருசலேம்: ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் பிரதமரிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சென்றுள்ள டிரம்ப் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். 2015 ம் ஆண்டு உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதிலிருந்து ஈரான் நினைத்ததை எல்லாம் செய்யலாம் என எண்ணி உள்ளதாக டொனால்டு டிரம்ப் கூறினார்.
மேலும் அவர், ஈரான் பெரிய அளவில் நிதி அளித்து தீவிரவாதிகள் மற்றும் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன் ஆயுத உதவிகளையும் செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
உலக அளவில் வலிமையாகவுள்ள தீவிரவாதிகளை ஒடுக்க இஸ்ரேல் நமக்கு உதவும் என நம்புவதாகவும் டிரம்ப் கூறினார். இஸ்ரேல் பாலஸ்தீனிய அமைதி பேச்சுவார்த்தைக்கான சாத்தியங்கள் பற்றி நம்பிக்கை தெரிவித்த டிரம்ப் தற்போது அதற்கான அரிய வாய்ப்பு அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபரை வரவேற்றுப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அமைதி பேச்சுவார்த்தைக்கான டிரம்பின் அர்ப்பணிப்பை வெகுவாக பாராட்டினார்.