விடாது துரத்தும் ரஷ்யா! விட்டுக் கொடுக்காத உக்ரைன்! நேரடியாக களத்தில் இறங்குமா அமெரிக்கா?
கீவ் : உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியை கைப்பற்றியதாக ரஷ்யா கூறிய நிலையில் மீண்டும் மரியுபோல் பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ளதாகவும் , அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் உக்ரைனுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து கிட்டதட்ட நாட்கள் ஆகியுள்ள நிலையில் 5 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்லது.
கிழக்கு உக்ரைன் பகுதியை குறி வைத்து ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும், இதனால் கூடுதல் உதவி தேவை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நட்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
உங்க நிலைப்பாட்டை மாத்திக்கோங்க.. திடீரென ஆசிய நாடுகளை சீண்டும் உக்ரைன் அதிபர்.. ஏன் இப்படி?
உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் ஆலையை தரை வழியாகத் தாக்கி வருகின்றன. வான்வழியாக விமானங்கள் மற்றும் தரை வழியாக பீரங்கி படிகள் மூலம் குண்டுவீச்சு தாக்குதல்கள் காரணமாக அந்த நகரம் பலத்த சேதத்தை சந்தித்து வருவதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் கூறியுள்ளார். மேலும் அந்த நகரத்தை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மரியுபோல் நகரம்
ரஷ்ய ராணுவத்தினர் மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் ஆலையில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உக்ரைன் ராணுவத்தினரை அழிக்க முயற்சிக்கின்றன என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மரியுபோல் துறைமுகப் பகுதி உக்ரைன் முக்கிய நகரம் ஆகும். இதன் காரணமாகவே ரஷ்ய துருப்புக்கள் மார்ச் மாத தொடக்கத்திலேயே ஆலையைச் சுற்றி வளைத்து, நகரத்தின் பெரும்பகுதியை படிப்படியாகக் கைப்பற்ற ஆர்வம் காட்டினர்.
போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
இந்த நிலையில் உக்ரைனில் போரை நிறுத்த வேண்டுமென போப் பிரான்சிஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "சோர்ந்துபோன மக்களின் துன்பத்தை எளிதாக்க"." அமைதியின் அடையாளமான ஈஸ்டர் நிகழ்வின் போது போர் நிறுத்தத்திற்கான வேண்டுகோளை நான் விடுக்கிறேன், இந்த ஞாயிறன்று ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் ஈஸ்டரைக் கொண்டாடுவதோடு, களைத்துப்போயிருக்கும் மக்களின் துன்பத்தைத் தணிக்க தாக்குதல்களை ரஷ்யா நிறுத்த வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மீண்டும் உதவும் அமெரிக்கா?
இதனிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் தலைநகரான கீவ்வுக்கு சென்று, உக்ரைனுக்கு தேவையான ஆயுதம் மற்றும் பிற உதவிகள் குறித்து விவாதிக்கவுள்ளார்கள் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க துருக்கி தயாராக உள்ளது என அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் உக்ரைன் தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் தொலைபேசியில் நடத்திய பேச்சின் போது உறுதி அளித்துள்ளார்.