நியூயார்க் கோர்ட்டில் மோடி மீது வழக்கு: காப்பாற்ற வந்தது ஒபாமா நிர்வாகம்
நியூயார்க்: குஜராத் கலவரம் தொடர்பாக அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவருக்கு விலக்கு உள்ளது என்று ஒபாமா அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வாழும் சீக்கிய அமைப்புகள் குஜராத் கலவரம் குறித்து அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து இது குறித்து மோடி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்கா வந்துள்ள மோடிக்கு வழக்குகளில் இருந்து விலக்கு உள்ளது என்று ஒபாமா அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஒபாமா அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில்,
ஒரு நாட்டின் தலைவராக இங்கு வரும் மோடிக்கு நீதிமன்றத்தில் ஆஜராவது உள்ளிட்டவைகளில் இருந்து விலக்கு உள்ளது. தற்போது தொடர்ந்துள்ள வழக்கு பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது. ஆனால் ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில் அவருக்கு அமெரிக்க நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றனர்.
மோடிக்கு நியூயார்க் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் கிடைத்த 21 நாட்களுக்குள் அவர் இது குறித்து பதில் அளிக்க வேண்டும். இதனால் அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் பாதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
14 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா வந்துள்ள மோடியை அசிங்கப்படுத்தவே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.