அமெரிக்கத் தமிழர்களுக்கு இது சித்திரைத் திருவிழாதான்... தமிழ்ப் புத்தாண்டல்ல!
வாசிங்டன் (யு.எஸ்): தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வருவது போல் தமிழ்ப் புத்தாண்டும் சித்திரை, தை என மாறி மாறி வருகின்றன.
அரசு விடுமுறை என்பது அதிகாரப்பூர்வமான புத்தாண்டாக கொண்டாடப்படுவதால் தமிழகத்தில் யாரும் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.
தமிழ் மொழி மீதும் தமிழர் வரலாற்றுடனும் அதீத பற்றுடன் இருக்கும் அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் சித்திரை மாதத்தை ‘சித்திரைத் திருவிழா' என்றே கொண்டாடுகிறார்கள். ஒரு சில அமைப்புகள் தமிழ்ப் புத்தாண்டு என்றும் விழாக்களை நடத்துகிறார்கள். சித்திரைத் திருவிழா கொண்டாடும் தமிழர் அமைப்புகள் பற்றிய செய்தித் தொகுப்பு இதோ....

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்
ஃப்ரீமாண்டில் ஏப்ரல் 26ம் தேதி சனிக்கிழமை, சித்திரைத் திருவிழாவாக கொண்டாடிய சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம், உணவுத் திருவிழாவாகவும், இதை சிறப்புடன் கொண்டாடினார்கள்.
ஆப்பம், ஃபில்டர் காஃபி, ரவா பாயசம், பஜ்ஜி, சிக்கன் 65, நெத்திலி மீன், சாம்பார் வடை, பால் கொழுக்கட்டை, கதம்ப சாதம், மினி ஊத்தப்பம், மட்டன் எலும்பு சூப், ரசம் வடை, பக்கோடா நெய் சாம்பார் இட்லி, கொத்து பரோட்டா, பாதாம் பால், கறிவேப்பிலை மீன் வருவல், தோசை, தம் பிரியாணி, தலப்பாக்கட்டு பிரியாணி என தமிழகத்தின் அத்தனை உணவு வகைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து விட்டார்கள். வட்டாரத்தில் உள்ள அனைத்து தமிழக உணவகங்களும் இதில் பங்கேற்று தங்கள் சிறப்பு உணவு வகைகளைப் பரிமாறி விட்டனர். பொய்க்கால் குதிரை உள்ளிட்ட தமிழர் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம்
வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மே 3ம் தேதி சனிக்கிழமை சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. வெர்ஜீனியாவிலுள்ள லாங்லி உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை ஆடல் பாடல் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சித்ரா ராமசுவாமி , ஸ்ரீதேவி சீனிவாஸ் அவர்களுடன் இணைந்து 'பாரதியின் பாஞ்சாலி; நாட்டிய நாடகம் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெறுகிறது.

சிகாகோ தமிழ்ச் சங்கம்
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மே 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ,அரோரா கோவில் வளாகத்தில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒரு வார்த்தை ஒரு லட்சம், ஜோடிப் பொருத்தம், குழந்தைகள் சிறப்புத் திறமை வெளிப்பாடு என பல்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெறும் இவ்விழாவுக்கு அனுமதி இலவசம். பொன்னியின் செல்வன் நாடகத்தின் ஒராண்டு நிறைவு விழாவும் அனுசரிக்கப் படுகிறது.

தென் மத்திய தமிழ்ச் சங்கம்
டென்னசி மாநிலம் மெம்பிஸ் வட்டாரத்தில் செயல்படும் தென் மத்திய தமிழ்ச் சங்கம் (Mid South Tamil Sangam) சித்திரைக் கலாட்டா என்ற பெயருடன் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறது. காலியர்வில் ஹாரல் தியேட்டரில், சனிக்கிழமை மே 10ம் தேதி பிற்பகல் 4 மணி முதல் 7.30 வரை நடைபெறும் இந்த விழாவில் பல்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன்.

மினசோட்டா தமிழ்ச் சங்கம்
மினசோட்டா தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் சார்பில் சித்திரைத் திருவிழா என்று தனியாக கொண்டாடா விட்டால் கூட மே, ஜூன் மாதங்கள் முழுவதும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, தமிழ்த் தேனீ, திருக்குறள் போட்டி என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை அமைத்துள்ளார்கள். ஏப்ரல் 14ம் தேதி அன்று மறக்காமல், சக தமிழர்களுக்கு சித்திரைத் திரு நாள் வாழ்த்துக்களை முகப்பக்கத்தில் (Facebook page) தெரிவித்துள்ளார்கள்.

ஒற்றுமையாய் கொண்டாட்டம்
இப்படி வெவ்வேறு தமிழ் அமைப்புகள் சித்திரை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடமல் சித்திரைத் திருவிழாவாகவே வெளிநாடுகளில் கொண்டாடி வருகிறார்கள். இவர்கள் கட்சி அரசியலைக் கடந்தவர்கள்.
தமிழக அரசு அறிவித்துள்ளது போல் ஜய வருட தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் ஓரிரு அமைப்புகளும் உள்ளன.
சில அமைப்புகளோ எதற்கும் இருக்கட்டும் என்று தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாள் விழா என்று கொண்டாடுகிறார்கள். எது எப்படியோ, வெளி நாட்டில் வசித்தாலும் தமிழர்கள் ஒரு கொண்டாட்டத்துக்காகவாது ஒன்று கூடுகிறார்கள் என்பதே சந்தோஷம்தானே!












Click it and Unblock the Notifications