ராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுதலை செய்ய முடிவெடுத்த ஜெ.வுக்கு நன்றி- யுஎஸ்.தமிழ் அமைப்புகள்
சிகாகோ: ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் செயல்படும் தமிழ் அமைப்புகள் கூட்டாக நன்றி தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் செயல்படும் உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் தில்லைக்குமரன், ஐடிஎஸ் அமைப்பின் தலைவர் ராஜாராம் கந்தசாமி, யு.எஸ்.டி.பி.ஏ.சி. தலைவர் காருண்யன் அருளானந்தம், இளந்தமிழரணி தலைவர் சாகுல் அமீது ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்த 24 மணி நேரத்துக்குள் அவர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தங்களின் அமைச்சரவை ஆவண செய்து அதனை சட்டமன்றத்தில் அறிவித்தது வரலாற்று சிறப்பு வாய்ந்தது.
தாயுள்ளத்தோடும் கருணையோடும் தாங்களெடுத்த இம்முடிவு 23 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் வாடிய அவர்களின் வாழ்வில் புது வெளிச்சத்தை ஏற்படுத்தி உலகமெங்கும் மனித நேயம் வேண்டுவோரின் மனதில் பேருவப்பை தந்திருக்கிறது.
ஆயுள் கைதிகள் பலரின் சிறைவாசத்தைவிட அதிக ஆண்டுகள் இந்த 7 பேரும் தனிமைச் சிறையில் வாடியுள்ளனர். மாநில அரசுக்கு இவர்களை விடுவிக்கும் உரிமை உள்ளது. எனவே அவர்களை விடுதலை செய்யும் தங்களின் முடிவு சரியானதும் பாராட்டத்தக்கதுமாகும். உலகத் தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்கள் சார்பில் இதற்காக நாங்கள் வாழ்த்துகளும் நன்றிகளும் கூற கடமைப்பட்டுள்ளோம்.
மத்திய அரசு, தமிழக அரசின் மனிதாபிமானம் மிக்க இம்முடிவுக்கு இடைக்கால தடை கோரியிருப்பினும் தங்களின் மீதும் தங்களின் நிர்வாக ஆளுமையின் மீதும் பெருநம்பிக்கை கொண்டுள்ள நாங்கள் அந்த 7 பேருக்கும் விரைவில் விடுதலை கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
பிப்ரவரி 24-ல் பிறந்த நாள் காணும் தங்களுக்கு பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகளையும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மனித நேயம் சார்ந்த தங்களின் அத்தனை முடிவுகளுக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.