"இனி இப்படி நடக்கவே கூடாது.." பகிரங்க வார்னிங் - சீன அமைச்சரிடம் நேரடியாக கோபத்தை காட்டிய அமெரிக்கா
அமெரிக்காவின் பாதுகாப்பிலும், இறையாண்மையில் என்றும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் எனக் கூறிய பிளிங்கன், இனி இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் ஒருபோதும் நடைபெறக்கூடாது எனவும் தெரிவித்தார்.
பெர்லின்: அமெரிக்காவை பலூன் மூலம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாகச் சீனாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவு துறை அமைச்சரைச் சந்தித்து இந்த எச்சரிக்கையைப் பதிவு செய்தார்.
மேலும், இதுபோன்ற பொறுப்பற்ற செயல் எதிர்காலத்தில் எக்காரணம் கொண்டும் நடைபெறவே கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துமீறிய சீனா
அமெரிக்காவில் இம்மாதத் தொடக்கத்தில், 40 ஆயிரம் அடிக்கு மேலே ஒரு மர்மமான பொருள் பறந்து கொண்டிருப்பதை அந்நாட்டு ராணுவ ரேடார்கள் கண்டறிந்தன. இதையடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்த அமெரிக்க பாதுகாப்பு துறையினர் அது சீன நாட்டுக்குச் சொந்தமான ராட்சத பலூன் என்பதைக் கண்டுபிடித்தனர். மேலும், அமெரிக்காவின் முக்கியப் பகுதிகளை இந்த பலூன் உளவு பார்த்து வந்ததும் தெரியவந்தது. அமெரிக்கா மட்டுமல்லாமல் உலக நாடுகளையே இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அமெரிக்கா கோபம்
முதலில், இந்தக் குற்றச்சாட்டைச் சீனா திட்டவட்டமாக மறுத்து வந்தது. பிறகு, அது தங்கள் நாட்டின் பலூன் தான் என்றும், பருவநிலையைக் கண்காணிப்பதற்காக அதனை பயன்படுத்துவதாகவும் சீனா தெரிவித்தது. சீனாவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அமெரிக்கா, போர் விமானம் மூலமாக அந்த ராட்சத பலூனை அதிரடியாகச் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் பாதுகாப்பு விஷயத்தில் இனி தலையிட்டால், சீனாவுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என அதிபர் ஜோ பிடனும் எச்சரித்தார். சீனாவின் இந்த செயலால் அதிருப்தியடைந்த அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சரும் தனது சீன பயணத்தை ரத்து செய்தார்.

சீனாவுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளின்கென்னும், சீன வெளியுறவுத் துறை அமைச்சரான வாங் யீ-யும் சந்தித்து கொண்டனர். அப்போது, உளவு பலூன் விவகாரத்தை முன்வைத்து வாங் யீ-யை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் கடுமையாக எச்சரித்தார்.

ரஷ்யாவுக்கு உதவி செய்தால்..
இதுகுறித்து அமெரிக்கச் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறுகையில், "சீனாவின் உளவு பலூன் அமெரிக்க வான் பரப்பில் பறந்த விவகாரத்தை சுட்டிக்காட்டிய பிளிங்கன், சீன அமைச்சர் வாங் யீ-யை கடுமையாக எச்சரித்தார். அமெரிக்காவின் பாதுகாப்பிலும், இறையாண்மையில் என்றும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் எனக் கூறிய பிளிங்கன், இனி இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் ஒருபோதும் நடைபெறக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்குச் சீனா தொடர்ந்து உதவி வருவது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் பிளிங்கன் எச்சரித்தார்" என செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications