"அடுத்த 24 மணி நேரத்தில்.." வெடிக்க போகுது போர்? இஸ்ரேலை தாக்க ரெடியாகும் ஈரான்! அமெரிக்கா வார்னிங்
டெல் அவிவ்: மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் அடுத்த 24 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தலாம் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.. காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் பல மாதங்களாகத் தொடர்கிறது.

இந்த பஞ்சாயத்தே முடியாமல் இருக்க அடுத்தகட்டமாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
சிரியா: சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் கடந்த வாரம் நடந்த ஏவுகணை தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவர் உட்பட சிலர் கொல்லப்பட்டதில் இருந்தே பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டும் ஈரான், இதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறது. திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதைச் சமாளிக்க இஸ்ரேலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது பதிலடி நடவடிக்கையை ஆரம்பிக்கும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எச்சரித்துள்ளது. திடீரென நடக்கும் இந்தத் தாக்குதல் பிராந்திய போரைத் தொடங்கி வைக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று இஸ்ரேலை எச்சரித்துள்ள அமெரிக்க அதிபர் பைடன், மறுபுறம் தாக்குதலை நடத்த வேண்டாம் என்று ஈரானையும் எச்சரித்துள்ளார்.
பைடன்: இது தொடர்பாக பைடன் மேலும் கூறுகையில், "என்னால் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் மிக விரைவில் தாக்குதலை நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதை வேண்டுமானாலும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் அங்கு நிலைமை மோசமாகும். எனவே, ஈரான் அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது" என்றும் அவர் எச்சரித்தார்.
இஸ்ரேல் மீது மிகப் பெரியளவில் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் எச்சரித்துள்ளன. ஈரானின் கடந்த கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது ட்ரோன்கள் அல்லது ஏவுகணை தாக்குதலை அவர்கள் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையும் வந்துள்ளன.
உதவும் அமெரிக்கா: எல்லைகளில் இருந்து 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் ஈரானிடம் இருக்கிறது. இதனால் அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கி உள்ளது. அதேபோல அங்குள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்காவும் இறங்கியுள்ளது. அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரு போர்க்கப்பல்களும் அங்கு இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது: காசாவில் உள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை ஆரம்பித்தது முதலே அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் மற்ற நாடுகள் உள்ளே வந்தால் அது பிராந்திய போராக மாறும் அபாயம் இருக்கிறது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அங்கு அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இஸ்ரேல், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பைடன் அரசு, ஈரான் உடனும் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருகிறது. இருப்பினும், அமெரிக்காவால் அங்கே முழுமையாக அமைதியைக் கொண்டு வர முடிவதில்லை என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications