ஆப்கானில் மீண்டும் தாலிபான் ஆட்டம்.. பக்ராம் படைத்தளத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க படை.. பதற்றம்!
காபுல்: ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமான படைத்தளத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் எழுச்சி பெற்று வரும் நிலையில் அமெரிக்க படைகள் அங்கு வாபஸ் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
11 செப்டம்பர் 2001ல் அமெரிக்காவில் பின்லேடன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் போர் தொடுத்தது. தாலிபான் படைகளை வீழ்த்தும் வகையிலும், தாலிபான் அரசை கவிழ்க்கும் விதமாகவும் அமெரிக்கா போர் தொடுத்தது.
அமெரிக்காவின் மிக நீண்ட அயல்நாட்டு போராக கருதப்பட்ட இந்த மோதலில் தாலிபான் படைகள் வீழ்ந்தன. ஆனாலும் தொடர்ந்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் படைகளை குவித்து வந்தது. நேட்டோ கூட்டு படைகளும், அமெரிக்க படைகளும் இங்கு குவிக்கப்பட்டு வந்தன.

படைகள்
முக்கியமாக அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரம் அடைந்தது. கூடுதல் வீரர்கள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டனர். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையால் கொல்லப்பட்டார், தாலிபானை தோற்றுவித்த முல்லா உமரும் மரணம் அடைந்த நிலையில் தாலிபான்களின் பலம் ஆப்கானிஸ்தானில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

அமெரிக்க படைகளும்
அமெரிக்காவும் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. மிக நீண்ட போரை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு கடந்த வருடம் நடந்த பேச்சுவார்த்தையில் தாலிபான்களுடன் அமெரிக்கா உடன்படிக்கையில் ஈடுபட்டது. அதன்படி கடந்த வருடம் பிப்ரவரியில் கத்தாரில் செய்யப்பட்ட உடன்படிக்கையில் தாலிபான்கள் அமைதி காக்கும்பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து 14 மாதங்களுக்குள் படைகளை வெளியேற்றுவோம் என்று அமெரிக்கா அறிவித்தது.

ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தின்படி 11 செப்டம்பர் 2021க்குள் அமெரிக்கா படைகளை வெளியேற்ற வேண்டும். சரியாக 9/11 சம்பவம் நடந்து 20 வருடம் முடியும் நாளையில் அனைத்து அமெரிக்க படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும். இதன் காரணமாக தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து வேகமாக அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. ஏற்கனவே பல பகுதிகளில் இருந்து படைகள் வெளியேற்றப்பட்டுவிட்டன.

வெளியேற்றம்
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் முக்கியமான விமானப்படைத்தளங்களில் ஒன்றாக இருந்த பக்ராம் ஏர்பீல்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி உள்ளன. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அமெரிக்க படைகள் வெளியேறி உள்ளன. எங்களிடம் அமெரிக்க எதுவும் சொல்லவில்லை என்று ஆப்கானிஸ்தான் ராணுவ ஜெனரல் அசதுல்லா கோஷித்தானி தெரிவித்துள்ளார்.

தாமதம்
அமெரிக்க படைகள் நாடு திரும்பி சில மணி நேரம் கழித்துதான் இந்த விவரமே ஆப்கானிஸ்தான் படைகளுக்கு தெரிந்து இருக்கிறது. இங்கு மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இதில் 5000க்கும் அதிகமான தாலிபான் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது அமெரிக்க வீரர்கள் வெளியேறி உள்ளதால் இங்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. இது ஆப்கானிஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமைதி
அமெரிக்காவுடன் அமைதி உடன்படிக்கையை தாலிபான் மேற்கொண்டு இருந்தாலும் கூட கடந்த சில தினங்களாக மீண்டும் ஆபகானிஸ்தானில் தாலிபான் படைகள் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 10 மாவட்டங்களை தாலிபான் படைகள் கைப்பற்றி உள்ளது. வேகமாக பல்வேறு மாவட்டங்களை தாலிபான் படைகள் பிடித்து வருகிறது.

மோசம்
இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறி இருப்பது ஆப்கானிஸ்தான் அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மிகவும் பிஸியாக இருந்த பக்ராம் விமானப்படைத்தளம் தற்போது மின்சார இணைப்பு கூட இன்றி முடக்கப்பட்டுள்ளது . அமெரிக்க படைகள் ஆயுதங்களை எல்லாம் எடுத்துவிட்டு, சிறிய ரக ஆயுதங்களை மட்டும் ஆப்கானிஸ்தான் படைக்கு விட்டுவிட்டு சென்று உள்ளன.

புலம்பல்
இது ஆப்கானிஸ்தான் படைக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தாலிபான்கள் மீண்டும் நாட்டை கைப்பற்றும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க படைகள் போல ஆப்கானிஸ்தான் படைகள் அவ்வளவு வலுவானது கிடையாது. அவர்களிடம் போதிய பயிற்சியும், வீரர்களும் கிடையாது.

கஷ்டம்
அமெரிக்க படைகளின் ஆதரவு இன்றியும், போதிய ஆயுதங்கள் இன்றியும் தாலிபான்களை எதிர்கொள்ள முடியாது. இது மிகவும் கஷ்டம் என்று ஆப்கானிஸ்தான் ராணுவ ஜெனரல் அசதுல்லா கோஷித்தானி தெரிவித்துள்ளார். முழு மாற்றம் வருவதற்கு முன் அமெரிக்க இங்கிருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான் படைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும், தாலிபான்களுக்கு இது சாதகமாக முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications