5 வாழைப்பழம், 2 முட்டை கொடுத்து முடி வெட்டும் வெனிசூலா மக்கள்.. ஏன், என்னாச்சு?
Recommended Video
கராகஸ்: வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மூழ்கி கிடக்கிறது வெனிசூலா. பணம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். படு பயங்கரமான பண வீக்கமே இந்த அவல நிலைக்குக் காரணம்.
பொருட்கள் வாங்கவும், அன்றாட வாழ்க்கைச் செலவுக்கும் அங்குள்ள மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். பொருளாதாரம் படு மோசமாகியுள்ளது. கையில் பணம் இல்லாததால் பண்ட மாற்றில் மக்கள் இறங்கியுள்ளனர்.
முடி வெட்ட காசுக்குப் பதில் 5 வாழைப்பழம், 2 முட்டை தருகிறார்கள். சிகரெட் பாக்கெட்டுகளை கட்டணமாக கொடுத்து டாக்சிகளில் பயணிக்கிறார்கள்.
பொலிவிழந்த பொலிவர்
வெனிசூலா நாட்டு கரன்சியான பொலிவர் முற்றிலும் மதிப்பிழந்து போய் விட்டது. இப்படிப்பட்ட ஒரு அவல நிலை வரும் என சில மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டது. ஒரு சாதாரண காபி குடிக்க ஒரு மாத சம்பளத்தை செலவிட வேண்டிய நிலை வந்துள்ளது. பண வீக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
பண்ட மாற்று
வெனிசூலா மக்கள் பணத்துக்குப் பதில் பொருட்களை பரிமாறிக் கொள்கின்றனர். வாழைப்பழம், சிகரெட், டூத்பேஸ்ட் என பல பொருட்களையும் பணத்துக்குப் பதில் பரிமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வேவுக்கு ஏற்பட்ட கதி
இப்படித்தான் ஜிம்பாப்வே நாட்டில் 2008ம் ஆண்டு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இன்று வெனிசூலா சந்திக்கும் அதே நிலையை அன்று ஜிம்பாப்வே சந்தித்தது. பண வீக்க விகிதம் கிட்டத்தட்ட 80 பில்லியன் சதவீதமாக இருந்தது. இதையடுத்து ஜிம்பாப்வே நாடு அமெரிக்க டாலருக்கு மாறியது. மேலும் பிரிட்டனின் பவுண்டு மற்றும் தென் அமெரிக்காவின் ரான்ட் கரன்சியையும் அது ஏற்றது.
வேதனையில் மக்கள்
இன்று வெனிசூலா மக்கள் அதே வேதனையை அனுபவிக்கின்றனர். நகரங்களில் உள்ளோர் செக், டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் கிராமப்புற மக்களுக்குத்தான் பெரும் சிரமம். அங்கு பொருட்களை மாற்றித்தான் மக்கள் பிழைப்பை நடத்த வேண்டியுள்ளதாம்.
ஒரு காலத்தில் ஓஹோ
ஒருகாலத்தில் ஓஹோவென திகழ்ந்த பெரும் பணக்கார லத்தீன் அமெரிக்க நாடுதான் வெனிசூலா. ஆனால் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மாட்ரோவின் ஆட்சிக்காலத்தில் அது அதலபாதாளத்திற்குப் போய் விட்டது.
நாட்டை விட்டு ஓடும் மக்கள்
பொருளாதார சீர்குலைவால் நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். 2015 -2017 காலகட்டத்தில் மொத்தம் 10 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 3 சதவீதமாகும்.
பழி போடும் மாட்ரோ
மாட்ரோ கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும் அவர்தான் பதவியில் நீடிப்பார். தற்போதைய பொருளாதார நிலை குறித்து மாட்ரோ கூறுகையில், விலைவாசி உயர்வும், உணவுப் பொருள் பற்றாக்குறையுமே இந்த நிலைக்குக் காரணம். இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காதான். எதிர்க்கட்சிகளுக்குப் பின்னால் அமெரிக்கா நிற்கிறது. இவர்கள் வெனிசூலாவை சீரழிக்கப் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார் மாட்ரோ.
சாவேஸ் நாட்டில் இப்படி ஒரு அவலம்
புரட்சித் தலைவராக போற்றப்பட்டவர் வெனிசூலாவின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ். அவருக்குப் பிறகு அதிபரானவர்தான் இந்த மாட்ரோ. வெனிசூலாவை பசி பட்டினி இல்லாத நாடாக மாற்றியவர் சாவேஸ். ஆனால் இப்போது மாட்ரோவின் ஆட்சியில் வெனிசூலா இதுவரை இல்லாத பெரும் பொருளாதார சீர்குலைவை சந்தித்துள்ளது.