Video: மெல்ல வந்த செல்லப் பறவை... மெய் மறக்க செய்த கீச் கீச் ஒலி.. ஒரு அழகிய அனுபவம்
சார்லேட்: காற்றின் மொழி ஒலியா இசையா.. மறக்க முடியாத ஒரு அழகுப் பாடல்.. உணர முடிந்தவர்களுக்குத்தான் இது பிடிக்கும்.. இயற்கை படைத்த ஒவ்வொரு விருந்துமே அப்படித்தான்.. உணர்ந்து உள்ளுக்குள் போவதுதான் அதன் அழகியலை உணர ஒரே வழி.
இதோ இங்கு அப்படி ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அமெரிக்காவின் சார்லேட்டில் வசித்து வரும் சகாயா. அதை அவரது மொழியிலேயே கேட்போமா...
காற்றிலாடும் மரங்களையும் மரத்தில் கீச் கீச் என்று சத்தம்போடும் பறைவைகளையும் ரசிக்காத மனிதர் இல்லை. இப்போது எல்லாம் பறவைகள் பார்ப்பது அவற்றின் சத்தம் கேட்பது எல்லாம் குறைந்து கொண்டு வருகிறது. பட்சி ராஜன் வந்து நம்ம அலைபேசிகளை எல்லாம் பிடுங்கி விட்டு போனால் தான் சரியாகுமா என்னவோ. சரி இருக்கிற பறவை இனங்களை நாம நல்லா பார்த்துக்கொள்வோம்.
அது ஒரு அதிகாலை நேரம்.. மெல்ல வானம் வெளிச்சப் புன்னகை பூக்க ஆரம்பித்த தருணம் அது. அந்த நேரத்தில் ஒரு குட்டிப் பறவையின் கீச் கீச் ஒலி.. இதயத் துடிப்பு போல மனசை தொட்டுச் சென்ற அந்த குரல் வந்த திசை நோக்கி ஓடிப் போய்ப் பார்த்தபோது.. அடிபட்டு பறக்க முடியாமல் தரையில் கிடந்தது அந்த அழகான குட்டிப் பறவை.
அதை மெல்லத் தொட்டுத் தடவி தலை கோதி வீட்டுக்குள் கொண்டு வந்தோம். கிட்டத்தட்ட ஒரு வாரம் எங்களது அன்பு வலையில் சிக்கியிருந்த அந்தப் பறவை மெல்ல மீண்டு காயம் துறந்து வானில் பறந்து அழகாய் ஓடோடிப் போனது. அந்த அனுபவப் பதிவை இந்த வீடியோவில் பாருங்க.
அது சரி இந்த குட்டி பறவையின் சேட்டைகளை எல்லாத்தையும் பார்த்து விட்டு ரசித்து சூப்பர்னு சொல்லி விட்டு தண்ணி வைக்க மறக்காதீங்க. ஆமா மரங்கள் அடியிலோ உங்கள் வீட்டு மொட்டை மாடியில , பால்கனியிலோ ஒரு சின்ன கின்னத்திலாவது வெயிலில் களைத்து வரும் பறவைகளுக்கு கொஞ்சம் தண்ணீர் வைத்தால் அவைகளுக்கு அது அமிர்தமாகும். செய்யலாமே.
- Inkpena சஹாயா