நிறுத்துங்க..ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜெலன்ஸ்கி.. பல தலைமுறைக்கு அனுபவிக்க வேண்டி இருக்கும்
கீவ் : உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் போரினால் ஏற்படும் விளைவுகளை ரஷ்யா பல தலைமுறைகளாக அனுபவிக்க வேண்டியிருக்கும் என உக்ரன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனில் மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா ஆகிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 25 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதேபோல் வெர்க்னோடோரட்ஸ்கே, கிரிம்கா மற்றும் ஸ்டெப்னே ஆகிய பகுதிகளிலும் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
வவ்வால் கிருமி! உக்ரைனிடம் பயோ ஏஜெண்ட்! பல நாடுகளுக்கு பரவலாம்.. ரஷ்யா வார்னிங்.. அமெரிக்கா மறுப்பு!
உக்ரைன் போர்
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் 'பேரழிவு தரும் பைத்தியக்காரத்தனத்தால்' வழிநடத்தப்படுகிறது என்றும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக சுவிட்சர்லாந்து விலை கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் சுவிட்சர்லாந்து அதிபர் இக்னேசியோ காசிஸ் கூறியுள்ளார். இதேபோல் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த பட்டியலில் தற்போது சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் தவிப்பு
ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வதற்கான தொண்டு நிறுவனங்கள், அங்கு செல்வதற்கு போராடி வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறி உள்ளது. ஆனால் ரஷ்ய படைகளின் போர் காரணமாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அங்கு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
மக்கள் வெளியேற்றம்
ரஷ்யா படையெடுப்பு காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 6.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறி உள்ளது. இந்த நேரத்தில் தான் ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை சீனா கண்டிக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு அளித்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்த நிலையில், உக்ரைன் தனது கருத்தை கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் உக்ரைனில் மார்ச் 18ஆம் தேதி வரை குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,399 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடைசியாக அர்த்தமுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா உறுதியளிக்க வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். மேலும் உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் போரினால் ஏற்படும் விளைவுகளை ரஷ்யா பல தலைமுறைகளாக அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும்ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.