போர் குற்ற வழக்கு எதிரொலி: பிரேசிலுக்கான இலங்கை தூதர் ஜெகத் ஜெயசூர்யா தப்பி ஓட்டம்
போர் குற்ற வழக்கு தொடரப்பட்ட நிலையில் பிரேசிலுக்கான இலங்கை தூதர் ஜெகத் ஜெயசூர்யா அந்நாட்டைவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
பிரேசிலியா: போர் குற்ற வழக்கு தொடரப்பட்ட நிலையில் பிரேசிலுக்கான இலங்கை தூதர் ஜெகத் ஜெயசூர்யா தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வன்னியில் 2007 முதல் 2009-ம் ஆண்டு வரை ராணுவ தளபதியாக இருந்தவர் ஜெகத் ஜெயசூர்யா. அப்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மருத்துவமனைகள், குழந்தைகள் இல்லங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

பிரேசிலுக்கான தூதர்
2009-ல் இறுதி யுத்தம் முடிந்த பின்னர் ஜெகத் ஜெயசூர்யாவுக்கு பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான தூதர் பதவி பரிசாக அளிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பிரேசிலுக்கான தூதராக பணியாற்றி வந்தார் ஜெகத் சூர்யா.

போர்க் குற்ற வழக்கு
இந்த நிலையில் 14 சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் சர்வதேச சட்ட வல்லுநர் கார்லோஸ் காஸ்ரேசனா பிரேசிலில் போர்க் குற்ற வழக்கை தாக்கல் செய்தார். சிலி முன்னாள் சர்வாதிகாரி பினோசெட், அர்ஜெண்டினா ராணுவ தளபதி ஜார்ஜ் ரபேல் விடெலா ஆகியோருக்கு எதிராக போர்க் குற்ற வழக்குகளை தொடர்ந்தவர் கார்லோஸ் காஸ்ரேசனா.

தப்பி ஓடி தலைமறைவு
தற்போது வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஜெகத் ஜெயசூர்யா பிரேசிலைவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் இலங்கையில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை விளக்கம்
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இலங்கை அரசு, ஜெகத் ஜெயசூர்யா பதவி காலம் முடிவடைந்த நிலையில் பிரேசிலில் இருந்து புறப்பட்டுவிட்டார்; போர்க் குற்ற வழக்கு என்பது எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications