பெரும் விபத்திலிருந்து "ஜஸ்ட் மிஸ்" ஆகித் தப்பிய 2 விமானங்கள்.. பார்சிலோனோவில் ஒரு "திரில்"!
பார்சிலோனா: பார்சிலோனாவில் இரு விமானங்கள் ரன்வேயில் மோதவிருந்த பயங்கர விபத்து கடைசி விநாடியில் தவிர்க்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கடைசி நேரத்தில் ரன்வேயில் ஒரு விமானம் இருப்பதைப் பார்த்த தரையிறங்கவிருந்த இன்னொரு விமானம் சட்டென்று மேலே கிளம்பி போய் விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் திரில்லையும் கிலியையும் ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யுடெய்ர் என்ற விமான நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் 767 விமானம் மாஸ்கோவிலிருந்து பார்சிலோனாவுக்கு வந்தது. அங்கு தரையிறங்க அது எத்தனித்து கீழே இறங்க சில விநாடிகள் இருக்கும்போது எதிரே ரன்வேயில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஏர்பஸ் ஏ 340 பயணிகள் விமானம் நின்று கொண்டிருப்பதை ரஷ்ய விமானி பார்த்து விட்டார்.
இதையடுத்து மின்னல் வேகத்தில் சுதாரித்த அவர் லேன்டிங் கியரை நீக்கி விட்டு விமானத்தை அப்படியே மேலே தூக்கி விட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த விமானம் மட்டும் இறங்கியிருந்தால் கீழே நின்றிருந்த விமானத்தின் மீது மோதியிருக்கும். பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
இதயத்தை ஒரு விநாடி நிற்க வைக்கும் வகையிலான இந்த சம்பவம் மிகல் ஏஞ்செல் என்பவரால் கேமராவில் பதிவு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அதை யூடியூபில் அவர் போட்டுள்ளார். இது தற்போது வைரல் போல பரவியுள்ளது. 10 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர்.