6500 மரணங்கள், நோ செக்ஸ், தன்பால் ஈர்ப்பு தடை! கால்பந்து உலக கோப்பை சுற்றியிருக்கும் பரபர சர்ச்சைகள்
கத்தார்: ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கும் கால்பந்து உலகக் கோப்பை இன்று தொடங்கும் நிலையில், இது கத்தாருக்கு சாதனைகள் மட்டுமின்றி சர்ச்சைகள் நிறைந்ததாகவுமே இருந்துள்ளது.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த கால்பந்து உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது. கத்தாரில் நடக்கும் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 32 நாடுகள் களமிறங்குகின்றன.
இந்த உலகக் கோப்பை போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் கத்தாருக்குப் படையெடுத்து வருகின்றனர். இன்று இரவு நடைபெறும் முதல் போட்டியில் கத்தார் அணி ஈக்வடார் அணியை எதிர்கொள்கிறது.

கத்தார் உலகக் கோப்பை
கத்தாரில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இந்த உலகக் கோப்பை தொடங்க உள்ள போதிலும், இதைச் சுற்றிய சர்ச்சைகளும் தொடர்ந்தே வருகிறது. அந்த சர்ச்சை இப்போது தொடங்கியது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2010இல் எப்போது உலகக் கோப்பை நடத்தும் உரிமையை கத்தார் வென்றதோ, அப்போதில் இருந்தே இதுபோன்ற சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. உலகக் கோப்பை நெருங்க நெருங்க இந்த சர்ச்சை அதிகரித்தே தவிரக் குறைந்தது போலத் தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு, போட்டி நடைபெறும் இடங்களில் பீர் விற்பனைக்கு கத்தார் தடை விதித்து இருந்தது.

முதல்முறை
சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இந்த உலகக் கோப்பை மகத்தான ஒன்றாக நிச்சயம் இருக்கும். கோடிக் கணக்கான ரசிகர்களை தங்கள் நாட்டிற்கு வரவேற்கும் கத்தார், மிகப் பிரம்மாண்டமான ஒரு உலகக் கோப்பையை நடத்தவும் திட்டமிட்டு உள்ளது. இந்த உலகக் கோப்பையில் பல சாதனைகளும் உள்ளன. கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் முதல் அரபு நாடு மற்றும் முதல் மத்திய கிழக்கு நாடு என்ற சிறப்பை கத்தார் பெற்றுள்ளது. இதற்கு முன்பு உலகக் கோப்பையில் பங்கேற்காத நாடு, நேரடியாக உலகக் கோப்பையை நடத்தி அதில் கலந்து கொள்வதும் இதுவே முதல்முறை. உள்ளூர் ரசிகர்களைக் கவர எப்போதும் போட்டி நடத்தும் நாடு தானாகவே உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். அப்படித்தான் தரவரிசையில் 52ஆவது இடத்தில் இருக்கும் கத்தார் இந்த உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.

குளிர்காலம்
கத்தார் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் வெயில் எந்தளவுக்கு வாட்டி வதைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்கவே இந்த முறை குளிர் காலத்தில் உலகக் கோப்பை போட்டிகள் நடக்கிறது. குளிர் காலத்தில் கால்பந்து உலகக் கோப்பை நடப்பதும் இதுவே முதல்முறையாகும். இதனால் உலகெங்கும் நடக்கும் பல்வேறு லீக் தொடர்கள் தங்கள் அட்டவணையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு இருந்தது.

பிரம்மாண்டம்
கத்தார் இதற்குச் செலவழித்த தொகை மிகப் பெரியது. போட்டியை நடத்த உரிமை பெற்ற போது, கத்தாரில் சர்வதேச தரத்தில் கால்பந்து மைதானம் எதுவும் இல்லை. இதனால் கத்தார் தனது அனைத்து மைதானங்களையும் புதிதாகக் கட்ட வேண்டியிருந்தது. இது தவிர ஹோட்டல் உட்கட்டமைப்பு என பல்வேறு விஷயங்களிலும் கத்தார் முதலீடு செய்ய வேண்டி இருந்தது. இதனால் உலகக் கோப்பையை நடத்த மட்டும் கத்தாருக்கு 220 பில்லியன் (இந்திய மதிப்பில் 17 லட்சம் கோடி) செலவானது.

புதிய விதிமுறைகள்
அதேபோல இதில் புதிய விதிகள் மற்றும் தொழில்நுட்பங்களும் அறிமுகமாக உள்ளது. பொதுவாக 3 மாற்று வீரர்கள் மட்டுமே கால்பந்து போட்டிகளில் அனுமதிக்கப்படும் நிலையில், கத்தார் உலகக் கோப்பையில் இது 5ஆக அதிகரிக்கப்படுகிறது. அதேபோல ஆட்டோமெடிக்காக ஆஃப்சைடை கண்டறிய ஆஃப்சைடு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதேபோல இதில் கலந்து கொள்ள 3 பெண் நடுவர்கள் நடுவர்களாகத் தேர்வாகி உள்ளதும் இதுவே முதல்முறை.

சின்ன நாடு
மறுபுறம் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமலேயே உள்ளது. கத்தாரை போட்டி நடத்தும் நாடாகத் தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் பிபா தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்தார். கத்தார் மிகச் சிறிய நாடு என்றும் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகள் அங்கு நடத்துவது கஷ்டம் தான் என்றும் செப் பிளாட்டர் தெரிவித்தார். 1954இல் சுவிட்சர்லாந்து உலகக் கோப்பையை நடத்திய நிலையில், அதன் பின்னர் உலகக் கோப்பையை நடத்தும் மிகச் சிறிய நாடு கத்தார் தான்.

சர்ச்சைகள்
போட்டியை நடத்த உரிமை பெற்ற பிறகு கத்தார், மைதானங்களை மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக ஹோட்டல், நெடுஞ்சாலை என அனைத்தையும் புதிதாகக் கட்ட வேண்டி இருந்து. அப்போது பல மனித உரிமை மீறல்களும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் 5 ஆசிய நாடுகளில் இருந்து மட்டும் சுமார் 6500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். அதேபோல தீவிர இஸ்லாமிய நாடான கத்தாரில் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ளவும் தன்பால் ஈர்பாளர்களுக்கும் கூட அனுமதி இல்லை.












Click it and Unblock the Notifications