"ஒரே ஒரு போன் கால்.." மனம் மாறிய ஹசீனா.. 45 நிமிடங்களில் எல்லாம் ஓவர்.. வங்கதேசத்தில் என்ன நடந்தது?
டாக்கா: வங்கதேசத்தில் நேற்று திங்கள்கிழமை யாருமே எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடந்தன. அங்கு மாணவர் போராட்டம் வன்முறையாக மாறிய சூழலில், நிலைமை மோசமானது. சில மணி நேரத்தில் நிலைமையைக் கையை மீறிச் சென்ற நிலையில், ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்தார். அங்கே கடைசி நேரத்தில் என்ன நடந்தது.. ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முடிவை எப்படி முடிவெடுத்தார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
நேற்றைய தினம் டாக்காவில் திரண்ட சுமார் ஒரு லட்சம் போராட்டக்காரர்கள், கண்ணில் பட்டதை எல்லாம் சூறையாடினர். போராட்டக்காரர்கள் அதிகாரப்பூர்வ இலத்தை நோக்கி வருவதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

ஹசீனா: இதனால் ஹசீனா அவசர அவசரமாகத் தனது இல்லத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். கடந்த 2009 முதல் ஆட்சியில் இருக்கும் ஹசீனா எளிதாக நாட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கவில்லை. அவரது நெருக்கமான வட்டாரம் பல மணி நேரம் வரை அவரை சமாதானப்படுத்த வேண்டி இருந்துள்ளது. அங்குக் கடைசி சில மணி நேரம் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
என்ன நடந்தது: டாக்காவை போராட்டக்காரர்கள் சூழ்ந்த போதிலும் ஹசீனா அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளக் கடைசி வரை முயன்று இருக்கிறார். நேற்று காலையே நிலைமையைக் கையை மீறிச் செல்வது தெரிந்துவிட்டது. இருப்பினும், ஹசீனா போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். போராட்டக்காரர்களை ஒடுக்க அதிக ஃபோர்ஸை பயன்படுத்தவும் அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஹசீனாவுக்கு நெருக்கமாக இருக்கும் சில அவாமி லீக் தலைவர்கள் ஞாயிறு இரவே நிலைமை மோசமாகும் என்பதை உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் ஞாயிற்றுக்கிழமையே அதிகாரத்தை ராணுவத்திற்கு ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், ஹசீனா அப்போது தனது அதிகாரத்தை விட்டுத் தரத் தயாராக இல்லை. மாறாக மாணவர் போராட்டத்தை ஒடுக்க மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்தார். திங்கள் முதல் இணையச் சேவை முடக்கப்படுவதாகவும் கடுமையான ஊரடங்கு அமலுக்கு வருவதாகவும் அறிவித்தார்.
திரண்ட போராட்டக்காரர்கள்: ஆனால், இதெல்லாம் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை. மறுநாள் திங்கள் காலையே தலைநகர் டாக்கா முழுக்க போராட்டக்காரர்கள் சாலையில் திரண்டனர். நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டதை உணர்ந்த பாதுகாப்புப் படையினர் அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சில மணி நேரத்தில் அங்கே நிலைமை மொத்தமாக மாறியது. திங்கள் காலை 11 மணியளவில் டாக்கா சாலைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அதிருப்தி: இதையடுத்தே வங்கதேச முப்படை தளபதிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரதமர் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டனர். வங்கதேசத்தில் நிலைமை மிக மோசமாக இருப்பதை அவர்கள் ஹசீனாவிடம் விளக்க முயன்றுள்ளனர். இருப்பினும், அதை ஏற்காத ஹசீனா, போலீசார் மற்றும் ராணுவ நடவடிக்கை போதுமானதாக இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். ஹசீனாவிடம் நிலைமையைப் புரிய வைக்க முடியாததால் சிலர், நிலைமையின் தீவிரத்தை உணர்த்த ஹசீனாவின் மூத்த சகோதரி ரெஹானாவிடம் பேசினர். இருப்பினும் ரெஹானா சொல்லியும் ஹசீனா ராஜினாமா செய்யத் தயாராக இல்லை.
இதனால் வேறு வழியின்றி வெளிநாட்டில் இருக்கும் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் ஜாயிடம் பேசியுள்ளனர். தனது மகன் சஜீப் வசேத் கூறிய பிறகு ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்ய சம்மதித்துள்ளார். அதன் பிறகே அவர் அதிபர் அலுவலகம் சென்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அங்கிருந்து இந்தியா கிளம்பியுள்ளார்.
வெறும் 45 நிமிடங்கள்: இதற்கிடையே இந்தியா கிளம்பும் முன்பு ஹசீனா கடைசியாக நாட்டு மக்களுக்கு உரையைப் பதிவு செய்ய விரும்பியுள்ளார். இருப்பினும், பிரதமர் இல்லம் நோக்கி போராட்டக்காரர்கள் வந்து கொண்டு இருந்ததால் ராணுவம் அதை மறுத்துவிட்டது. போராட்டக்காரர்கள் நெருக்கியதால் ஹசீனாவுக்கு வெறும் 45 நிமிடங்கள் மட்டும் அவகாசம் தரப்பட்டது.
அதற்குள் அவர் தனது முக்கியமான சில உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஹெலிகாப்டரில் புறப்பட்டுவிட்டார். பாதுகாப்புப் படையினர் எச்சரித்தது போலவே ஹசீனா கிளம்பிக் கொஞ்ச நேரத்திற்குள்ளேயே பிரதமர் இல்லத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடிவிட்டனர்.












Click it and Unblock the Notifications