"மோடி எங்கே.." தேடிய அமெரிக்க அதிபர் பைடன்! அடுத்து நடந்த செம சம்பவம்! ஜி20 மாநாட்டில் சுவாரசியம்
வாஷிங்டன்: ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் நடந்து வரும் நிலையில், இன்று அங்கு ஒரு சுவாரசிய நிகழ்வு ஒன்று நடந்து உள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக டாப் 20 இடங்களில் இருக்கும் நாடுகள் தான் ஜி20 என்று அழைக்கப்படும். இந்நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 உச்சி மாநாடு அவ்வப்போது நடைபெறும்..
இந்த ஜி20 மாநாட்டில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். சர்வதேச அளவில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்.
இது புத்தர், காந்தியின் பூமி.. இந்திய ஜி20 மாநாட்டில் உலக அமைதி உறுதியாகும்..பிரதமர் மோடி நம்பிக்கை
ஜி20 மாநாடு
இந்த ஜி20 நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாடு இந்தாண்டு இந்தோனேசியாவில் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தோனேசியா சென்றுள்ளனர். உக்ரைன் போர், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி
இதில் கலந்து கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியா சென்றார். இன்று பாலியில் ஜி20 மாநாடு தொடங்கி உள்ள நிலையில், பல்வேறு உலக தலைவர்கள் அங்குக் குவிந்து உள்ளனர். இதற்கிடையே அங்கு இன்று சுவாரசிய நிகழ்வு ஒன்று அரங்கேறியது. பாலியில் ஜி20 மாநாடு இன்று தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தேடி வந்தார்.
தேடி வந்த பைடன்
நரேந்திர மோடியைத் தேடி வந்த பைடன் அவரிடம் கை கொடுத்து உரையாடினார். இதை பின்னால் இருந்த வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், ஜெய்சங்கரிடம் எதோ சொல்லிவிட்டு பைடன் அவர் இருக்கைக்கு அருகே செல்கிறார். அப்போது பிரதமர் மோடி அவரிடம் எதோ சொல்ல, அதைக் கேட்டு ரசிக்கும் அமெரிக்க அதிபர் பைடன் சிரித்துக் கொண்டே பிரதமர் மோடியைத் தட்டிக் கொடுக்கிறார்.
வீடியோ
பிரதமர் மோடியிடம் முதலில் உரையாடிய பின்னர் தான் அமெரிக்க அதிபர் பைடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட உலக தலைவர்களைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அதிபர் பைடனும், பிரதமர் மோடியும் அருகில் தான் அமர்ந்து இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இதை பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஏன் முக்கியம்
ராஜதந்திர ரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாகவே இருந்து வருகிறது. மேலும், கண்டிப்பாக ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று இந்தியா கூறி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா போர்நிறுத்தத்தை வலியுறுத்தினாலும் கூட, ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து இந்தியா ஒதுங்கியே இருக்கிறது.
ரஷ்யா விவகாரம்
அதேபோல உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா தொடங்கி பல்வேறு உலக நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தன. இருப்பினும், ரஷ்யா மீது இந்தியா எந்தவொரு பொருளாதாரத் தடைகளையும் விதிக்கவில்லை. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் தங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லை என்றும் இந்தியா கூறி இருந்தது.
பிரதமர் மோடி பேச்சு
முன்னதாக இந்த ஜி 20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "உக்ரைனில் போரைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் அமைதியைக் கொண்டு வரும் வழியை உலகம் கண்டுபிடிக்க வேண்டும்.. கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. அதன் பிறகு, அக்கால தலைவர்கள் அமைதியின் பாதையில் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டனர். இப்போது அதைச் செய்ய வேண்டியது நமது கடமை" என்று கூறி இருந்தார்.