வீல் சேரில் இம்ரான் கான்.. கேமராவை உற்று பார்த்து.. என்ன சொன்னார் தெரியுமா! பாக்-இல் பெரும் குழப்பம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ள நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். சில மாதங்களுக்கு முன்பு, கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களே அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.
இதன் காரணமாக இம்ரான் கான் ஆட்சியைக் கவிழ்ந்தது. அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகக் கொண்டு வரப்பட்டார்,
இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு.. பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொந்தளிப்பு
பாகிஸ்தான்
இருப்பினும், வெளிநாட்டுச் சதி காரணமாகவே தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகத் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அவர் பிரசாரம் செய்து வருகிறார். இதற்காக அவர் நாடு முழுக்க மக்களைச் சந்தித்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை அப்படித்தான் பஞ்சாபில் பேரணியில் கலந்து கொண்டிருந்தார்.
வீல் சேர்
அப்போது அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசும் போது அடையாளம் தெரியாத நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். பல முறை சுடப்பட்ட போதிலும் நல்வாய்ப்பாக இதில் இம்ரான் கான் உயிர் தப்பினார். அவருக்குக் காலில் மட்டுமே குண்டு பாய்ந்து இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்ரான் கான் காலில் கட்டுடன் வீல் சேரில் அமர்ந்தபடி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நான்கு பேர்
தன்னைக் கொலை செய்ய நான்கு பேர் சதி செய்ததாக அதில் கூறும் இம்ரான் கான், இது தொடர்பாக தன்னிடம் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அந்த வீடியோ ஆதாரம் வெளியிடப்படும் என்றும் எச்சரித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் அவர் வெளியிட்டுள்ள புதிய அந்த வீடியோவில் அவர் மேலும் கூறுகையில், "நான்கு பேர் என்னைக் கொல்லத் திட்டமிட்டனர். இதற்கான வீடியோ ஆதாரத்தைத் தேவைப்பட்டால் வெளியிடுவேன்.
முன்பே தெரியும்
பேரணிக்குச் செல்லும் முன்பே கொலை முயற்சி நடக்கும் எனத் தெரியும், இரண்டு இடங்களில் ஒன்றில் என் மீது தாக்குதல் நடக்கும் என்பதை நான் அறிந்தே இருந்தேன். நான் 3.5 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்துள்ளேன். முக்கிய அமைப்புகளில் இன்னும் எனது ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவே எனக்கு இந்த தகவல்கள் வந்தன. அன்றைய தினம் கண்டெயன்ர் மீது பேசிக் கொண்டு இருந்த போது, திடீரென கால்களைத் தோட்டாக்கள் தாக்கியதால் நான் அப்படியே சரிந்துவிட்டேன்.
பாகிஸ்தான் மக்கள்
அங்கு என்னைத் தாக்குதல் நடத்த மொத்தம் இரண்டு பேர் இருந்தனர். அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு இருந்தால் என்னைக் காப்பாற்றியிருக்க முடியாது. மாற்றத்தை விரும்பிய பொதுமக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், இத்தனை ஆண்டுகளாக இங்கு அவர்கள் உருவாக்கி வைத்துள்ள கட்டமைப்பின் மூலம் அவர்கள் மீண்டும் அதிகாரத்தைப் பிடித்துவிட்டனர். ஆனால், மக்கள் இன்னும் என்னுடன் இருப்பதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராணுவம்
இங்குள்ள ராணுவ தளபதி எப்படி சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார் எனத் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் மனிதர்கள் தான். எங்களை விலங்குகள் போல் நடத்தாதீர்கள்.. இனியும் மக்கள் உங்கள் மோசடியை ஏற்க மாட்டார்கள். மக்கள் போராட்டத்திற்குத் தயாராகிவிட்டனர். கடந்த 6 மாதங்களில் ஏற்பட்ட எழுச்சியே இதற்குச் சாட்சி. ஈரான் அல்லது இலங்கையில் ஏற்பட்டதை போல ஒரு குழப்பமான சூழல் உருவாக வேண்டும் என விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
நீதித்துறை
நாட்டின் மிகப்பெரிய கட்சியின் தலைவரான எனக்கும் இங்கு நீதி கிடைக்கவில்லை.. கடந்த 6 மாதங்களில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும்,. நாட்டைக் காப்பாற்றுங்கள், உங்களுக்குப் பெரிய பொறுப்பு உள்ளது. மக்களைப் பாருங்கள். தெருக்களில், அவர்கள் சுதந்திரமாக வாழும் பாகிஸ்தானைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள். அடக்கி ஆளும் நாட்டை அவர்கள் விரும்பவில்லை" என்றார்.