அப்படியே கொரோனா மாதிரி.. சொகுசு கப்பலில் "ஹான்டா வைரஸ்" அட்டகாசம்! நடுக்கடலில் தவிக்கும் பயணிகள்
கேப் வெர்டே: சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மீண்டும் அப்படியொரு வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. ஹான்டா வைரஸ் காரணமாக ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாவுக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்து, அட்லாண்டிக் கடலின் அழகை ரசிக்கச் சென்ற பயணிகளுக்கு, எதிர்பாராத விதமாகக் காத்திருந்தது ஒரு கொடூரமான அதிர்ச்சி. மார்ச் மாதம் அர்ஜென்டினாவில் இருந்து புறப்பட்ட 'ஹோண்டியஸ்' (Hondius) என்ற சொகுசு கப்பலில், தற்போது ஹான்டாவைரஸ் (Hantavirus) எனும் கொடிய வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு
இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களில் இதுவரை இரண்டு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. மேலும் ஐந்து பேருக்கு அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதில் துரதிர்ஷ்டவசமாக ஒரு டச்சு தம்பதி மற்றும் ஒரு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 150 பயணிகள் இன்னும் அந்தக் கப்பலிலேயே சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்த ஹான்டாவைரஸ் பரவல் பயணிகளிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. மேலும், கவலைக்கிடமான நிலையில் இருந்த பிரிட்டிஷ் பயணி ஒருவர் மீட்கப்பட்டு, தற்போது தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்
தற்போது ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியான கேப் வெர்டே அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள இந்தக் கப்பலில், பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த சுமார் 150 பயணிகள் இன்னும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கப்பலைத் தனது எல்லையில் அனுமதிக்க அந்தத் தீவு நாடு மறுத்துவிட்டதால், கப்பல் நிறுவனம் பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற ஸ்பெயின் நாட்டின் லாஸ் பால்மாஸ் அல்லது டெனெரிஃப் பகுதிக்குச் செல்வது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்த வைரஸ் பொதுவாகப் பாதிக்கப்பட்ட எலிகள் மூலமே பரவுகிறது என்றும், மனிதர்களிடையே இது பரவுவது மிகவும் அபூர்வம் என்பதால் பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவு என்றும் உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இருந்தபோதிலும், சுமார் 14,000 முதல் 22,000 யூரோக்கள் வரை கட்டணம் செலுத்திப் பயணித்தவர்களுக்கு, இந்தப் பயணம் இப்போது ஒரு முடிவில்லாத போராட்டமாக மாறியுள்ளது.
விவாதம்
சொகுசு கப்பல்களில் இத்தகைய நோய்த்தொற்றுகள் ஏற்படுவது சர்வதேச சுற்றுலா துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எலிகள் மூலம் பரவும் ஒரு வைரஸ், இவ்வளவு பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஒரு நவீனச் சொகுசு கப்பலுக்குள் நுழைந்தது எப்படி என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கப்பல் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இது அப்படியே கொரோனா காலத்தையும் நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கிறது. 2020ம் ஆண்டு தொடக்கத்தில் ஜப்பானின் யோகோகாமா கடற்கரையில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலிலும் இப்படி தான் கொரோனா பரவியது. அன்று கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்தச் சொகுசு கப்பல் ஒரு மிதக்கும் சிறையாக மாறியது.. இப்போதும் கிட்டத்தட்ட ஹான்டாவைரஸ் அச்சத்தால் ஹோண்டியஸ் கப்பலைத் தனது எல்லையில் அனுமதிக்க ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே மறுத்துள்ளது.
மோசம் இல்லை
இருப்பினும், கொரோனா வைரஸுடன் ஒப்பிடுகையில் ஹான்டாவைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அபூர்வம் என்றும் இது பெரும்பாலும் பாதிக்கப்பட்ட எலிகள் மூலமே பரவுகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் ஒரு நிம்மதியான தகவலைத் தந்துள்ளது. பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவு என்றாலும் சொகுசு கப்பலில் இந்த வைரஸ் பரவியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.













Click it and Unblock the Notifications