Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சக்கட்ட குழப்பம்! பிரேசில் அதிபர் மாளிகையில் புகுந்து போல்சனாரோ ஆதரவாளர்கள் கலவரம்! நடப்பது என்ன

Subscribe to Oneindia Tamil

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அந்நாட்டின் நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைந்து அவர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் இப்போது உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. அங்குத் தீவிர வலதுசாரியான முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆதரவாளர்கள் போலீஸ் தடுப்புகளை மீறி நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர்,

இது பாசிச மனப்பான்மை கொண்டவர்களால் நடத்தப்படும் தாக்குதல் என்று அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கண்டனம் செய்தார். ஜெய்ர் போல்சனாரோவும் தனது ஆதரவாளர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 பிரேசில் தேர்தல்

பிரேசில் தேர்தல்

பிரேசில் நாட்டில் கடந்தாண்டு இறுதியில் புதிய அதிபரைத் தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது. இதில், லுலா டா சில்வா மற்றும் ஜெய்ர் போல்சனாரோ இடையே கடுமையான போட்டி நிலவியது. தீவிர வலதுசாரியான ஜெய்ர் போல்சனாரோவுக்கு தெற்கு பிரேசில் மாகாணங்களில் முழுமையாக ஆதரவு இருந்தது. அதேநேரம் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லுலா டா சில்வாவுக்கு மற்ற இடங்களில் ஆதரவு இருந்தது. இதனால் மிகவும் நெருக்கமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் 50.9% வாக்குகளைப் பெற்று லுலா டா சில்வா மீண்டும் பிரேசில் அதிபராகத் தேர்வானார். 49.1% வாக்குகளைப் பெற்ற லிபலர் கட்சியின் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

வன்முறை

வன்முறை

இருப்பினும், ஜெய்ர் போல்சனாரோ தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் ஏதோ முதலீடு நடந்து வருவதாகத் தொடர்ந்து கூறி வந்தார். மேலும், தனது ஆதரவாளர்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையிலும் அவர் தொடர்ந்து பேசி வந்தார். இந்தச் சூழலில் தலைநகர் பிரேசிலில் திரண்ட அவரது ஆதரவாளர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைந்து சூறையாடினர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறி இவர்கள் வன்முறையில் இறங்கினர்.

 ராணுவம் தலையிட வேண்டும்

ராணுவம் தலையிட வேண்டும்

முக்கிய இடங்களில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு தடுப்புகளைக் கடந்து, கூரைகளில் ஏறி, ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, உச்ச நீதிமன்ற கட்டிடங்களை முழுமையாக ஆக்கிரமித்தனர்.. அவர்களில் சிலர், தீவிர வலதுசாரி போல்சனாரோவை மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தினர். அல்லது லூலாவை ராணுவத்தின் உதவியுடன் வெளியேற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர். அவர்கள் இந்த மூன்று கட்டிடங்களில் இருந்த கண்ணாடி, சேர்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை அடித்து நொறுக்கினர்.

 அதிபர் எங்கே

அதிபர் எங்கே

நல்வாய்ப்பாக இந்த மோசமான தாக்குதல் நடந்த போது அதிபர் லூலா அதிபர் மாளிகையில் இல்லை. அங்குள்ள தென்கிழக்கு நகரமான அரராகுவாராவில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட லூலா சென்ற போதுதான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அதிபர் லூலா கூறுகையில், "நமது நாட்டின் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒன்றை இந்த பாசிச வெறியர்கள் செய்திருக்கிறார்கள்.. இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியால் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 களமிறங்கிய ராணுவம்

களமிறங்கிய ராணுவம்

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரேசிலியா போலீசாருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கப்பட்டன. இதையடுத்து மூன்று கட்டிடங்களில் இருந்தும் வன்முறையாளர்களை விரட்டியடிக்கக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இந்தச் சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்தில் சம்பவ இடத்தில் குவிந்த பாதுகாப்புப் படையினர், முதலில் உச்ச நீதிமன்றம், அடுத்து நாடாளுமன்றத்தை வன்முறையாளர்களிடம் இருந்து மீட்டனர். அங்கிருந்து வன்முறையாளர்களை அதிபர் மாளிகைக்கு அருகே உள்ள இடத்திற்கு அழைத்து வந்து அவர்களைக் கைது செய்யும் இறங்கியுள்ளது. இருப்பினும், இந்தளவுக்கு நிலைமை கையை மீறிச் செல்லும் வரை பிரேசில் அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 அமெரிக்காவில் நடந்ததை போலவே

அமெரிக்காவில் நடந்ததை போலவே

இந்தச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த சம்பவத்தையே பலருக்கும் நினைவூட்டியது. அப்போதும் அதிபர் தேர்தலில் தான் அடைந்த தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிய டிரம்ப், தனது ஆதரவாளர்களை நாடாளுமன்றத்தில் முற்றுகையிடச் செய்தார். இதனால் பைடனை அதிபராகத் தேர்வு செய்யும் நாளில் உள்ளே புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையை ஏற்படுத்தினர்.. இதனால் அங்கும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டே நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இப்போது பிரேசில் நாட்டிலும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

 உலக நாடுகள் கண்டனம்

உலக நாடுகள் கண்டனம்

இந்தச் சம்பவத்திற்குச் சர்வதேச தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரேசில் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்தச் சம்பவத்தை அமெரிக்கா வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+