பணபலம், ராணுவம், அணு ஆயுதம்! "உருவானது இஸ்லாமிய நேட்டோ!" பாகிஸ்தானுடன் கைகோர்த்த துருக்கி, கத்தார்
இஸ்லாமாபாத்: ஒரு பக்கம் மத்திய கிழக்கில் அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் மேகங்கள் இன்னும் முழுமையாக விலகவில்லை. இது ஒரு பக்கம் இருக்க ஒரு புதிய 'மெகா கூட்டணி' உருவெடுத்துள்ளது. அதாவது இஸ்லாமிய நாடுகள் இணைந்து நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்கவுள்ளன. ஏற்கனவே, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இதில் உள்ள நிலையில், இப்போது துருக்கியும் கத்தாரும் இணையத் தயாராகி வருகின்றன.
உலகளவில் இப்போது மிகவும் வலிமையான ஒரு பாதுகாப்பு கூட்டமைப்பு என்றால் அது நேட்டோ தான். அமெரிக்கா தலைமையிலான இந்த நேட்டோ அமைப்பில் கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 32 நாடுகள் உள்ளன. இதற்கிடையே நேட்டோவை போலவே இஸ்லாமிய நாடுகளைக் கொண்ட ஒரு போட்டி நேட்டோவை உருவாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.

அமைதி ஒப்பந்தம்
இது தொடர்பாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சமீபத்தில் அளித்த பேட்டியில், சவூதி - பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கத்தாரும் துருக்கியும் இணைவது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது வெறும் பேப்பர் ஒப்பந்தம் அல்ல; அமெரிக்காவின் பிடியிலிருந்து விலகி, தங்களுக்கு என ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொள்ளும் அந்த நாடுகளின் ராஜதந்திர நகர்வாக இது பார்க்கப்படுகிறது..
4 நாடுகள்
இந்தக் கூட்டணியில் இணைந்துள்ள உலக நாடுகளைப் பார்த்தால் அது சற்று யோசிக்க வைப்பதாகவே இருக்கிறது. சவூதி & கத்தார் நாடுகள் பெட்ரோலியம் மூலம் கிடைக்கும் அபரிமிதமான பணபலம் கொண்ட நாடுகளாக உள்ளன. அடுத்து துருக்கி.. இது நேட்டோ அமைப்பிலேயே இரண்டாவது பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள நாடு. அதிநவீன ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. அடுத்து கடைசியாக பாகிஸ்தான்.. இந்த நாடுகளிலேயே பலவீனமான லிங்க் போல தெரிந்தாலும்.. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை கொண்ட நாடாக உள்ளது.
முக்கியமான விதி
நேட்டோவின் 5வது விதியைப் போலவே (Article 5), இந்தக் கூட்டணியில் ஒரு விதி இருக்கிறது. அதாவது இந்த அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒட்டுமொத்தக் கூட்டணி மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்ற கூட்டுப் பாதுகாப்பு அம்சம் இதில் இடம்பெற்றுள்ளது. இதுவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
துருக்கி இந்தக் கூட்டணியில் இணைவது மிக முக்கியமானது. ஏனென்றால், துருக்கி ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. 2025 மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நிகழ்வின் போது பாகிஸ்தானுக்குத் துருக்கி உதவியது நினைவுகூரத்தக்கது. இப்போது சவூதியுடன் கைகோர்ப்பதன் மூலம், இஸ்லாமிய நாடுகளின் தலைமையைக் கைப்பற்றும் போட்டியில் இருந்த துருக்கி மற்றும் சவூதி ஆகிய இரு நாடுகளும் பழைய பகையை மறந்து ஒன்று சேர்ந்துள்ளன.
இந்தியாவுக்கு சிக்கல்?
இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் அனில் சோப்ரா இது குறித்துத் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "பாகிஸ்தானின் அணு ஆயுத பலமும், துருக்கியின் தொழில்நுட்பமும் இணைவது இந்தியப் பாதுகாப்புச் சூழலைச் சிக்கலாக்கும். இதற்குப் போட்டியாக இந்தியா இப்போது கிரீஸ், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தனது உறவை மேலும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தைச் செலுத்த இஸ்ரேலுடனான ஒருங்கிணைப்பு மிக அவசியம்" என்றார்.
மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்து வருவதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே இந்த நான்கு நாடுகளும் கைகோர்த்துள்ளன. 'இஸ்லாமிய நேட்டோ' என்ற இந்த புதிய அமைப்பு, பாகிஸ்தானுக்கு ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக மாறக்கூடும். அண்டை நாடுகளின் இந்தப் புதிய கூட்டணி கொடுக்கும் நம்பிக்கையால் பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டக்கூடும். இருப்பினும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தக்க பதிலடியைக் கொடுக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications