ரூ.2.2 கோடி ரொக்கம்! டேபிளில் எடுத்து வைத்த புதின்! டிரம்ப் மீட்டிங்கில் என்ன நடந்தது? வெளியான தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்- ரஷ்ய அதிபர் புதின் இடையேயான சந்திப்பு கடந்த வாரம் நடந்தது. இந்தச் சந்திப்பின்போது புதின் தனது ஜெட்களுக்கு எரிபொருள் நிரப்ப இந்திய மதிப்பில் ரூ.2.2 கோடியை ரொக்கமாக செலுத்த வேண்டி இருந்ததாம். உலக மிக முக்கிய நாட்டின் தலைவர் ஒருவர் ஏன் ரொக்கமாக செலுத்தினார்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே ஆகஸ்ட் 15ம் தேதி டிரம்ப்- புதின் சந்திப்ப நடந்தது. அலாஸ்காவில் நடந்த இந்தச் சந்திப்பில் பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இந்தச் சந்திப்பு குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.2.2 கோடி ரொக்கம்
அதாவது அமெரிக்கா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது மூன்று ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பச் சுமார் 2,50,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2.2 கோடி ரூபாய்) பணமாகச் செலுத்த வேண்டியிருந்தது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
ஜெட்களில் அதிக எரிபொருள் எடுத்துச் செல்ல முடியாது தான். எனவே, பொதுவாகவே ஒரு நாட்டிற்குச் சென்றால் அங்கு தான் எரிபொருளை நிரப்பிக் கொள்வார்கள். இதுபோல எரிபொருள் நிரப்பும்போது, ஆன்லைனின் பணம் அனுப்பிவிடுவார்கள். அப்போது ஏன் ரஷ்யா கேஷ்ஷாக பணம் கொடுத்தது என்ற கேள்வி எழும்.
பொருளாதாரத் தடைகள்
ரஷ்யா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாகவே, புதின் குழுவினர் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப நேரடியாக ரொக்கம் செலுத்த வேண்டி இருந்ததாக ரூபியோ விளக்கினார். இது குறித்து ரூபியோ மேலும் கூறுகையில், "ரஷ்யா தலைவர்கள் அலாஸ்காவுக்கு வந்தபோது, அவர்கள் எரிபொருள் நிரப்ப வேண்டி இருந்தது. பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவால் எங்கள் வங்க அமைப்பைப் பயன்படுத்த முடியாது. இதனால் அவர்கள் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப் பணமாகச் செலுத்த வேண்டியிருந்தது.
தடைகள் அமலில் உள்ளன
புதின் பதவிக்கு வந்த பிறகு விதிக்கப்பட்ட ஒவ்வொரு பொருளாதாரத் தடையும் இன்னமும் அமலில் இருக்கிறது. அந்தத் தடைகளின் தாக்கமும் நீடிக்கிறது.. இந்தப் பொருளாதாரத் தடையின் விளைவுகளை அவர்கள் தினமும் சந்திக்கிறார்கள். இந்தத் தடைகள் போர் செல்லும் திசையை மாற்றவில்லை என்ற போதிலும் இது தடைகள் பொருத்தமற்றவை என்று அர்த்தமல்ல" என்றார்.
புதின் டீம் அலாஸ்காவில் சுமார் ஐந்து மணி நேரம் தங்கியிருந்து.. டிரம்ப்- புதின் இடையே கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடந்த நிலையில், அதன் பிறகே அந்த டீம் புறப்பட்டது. இந்த மீட்டிங்கில் "எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை" என்று டிரம்ப் உறுதிப்படுத்தினாலும், ரஷ்யாவின் ஒரு முன்மொழிவு இன்னும் பரிசீலனையில் இருக்கிறது. இந்த டீலை ஏற்கும்படி டிரம்ப் உக்ரைனை ஊக்குவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா சொல்வது என்ன?
அலாஸ்கா பேச்சுவார்த்தைக்குப் பிறகும் போர் நிறுத்தம் செய்ய புதின் சம்மதிக்காத நிலையில், ரஷ்யா மீது ஏன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் புதிய தடைகள் புதினை சம்மதிக்க வைக்கும் என்று தான் நம்பவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ கூறினார்.
ரஷ்யா ஏற்கனவே கடுமையான தடைகளின் கீழ் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் அதன் பாதிப்புகள் உடனடியாக ஏற்படாது என்றும் அதன் பாதிப்பு எதிரொலிக்கச் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications