லெபனான் எல்லையில் இருக்கும் 900 இந்திய வீரர்கள்! திடீரென நடந்த தாக்குதல்.. தற்போதைய நிலை என்ன?
டெல் அவிவ்: இஸ்ரேல்-ஹமாஸ் படையினரின் மோதல் இன்று 10வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள 900 இந்திய வீரர்களின் நிலை என்ன என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு, இஸ்ரேல் தற்போது எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படைகளிடமிருந்து தப்பி பாலஸ்தீனத்தில் உதவி தேடி யூதர்கள் வந்தனர். அதேநேரம் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்களின் உதவி பிரிட்டனுக்கு தேவைப்பட்டது. எனவே பிரிட்டன் இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க முயன்றது. இதற்காக பாலஸ்தீனத்தை இரண்டாக உடைத்தது. இதுதான் இன்றைய மோதலுக்கு முக்கிய காரணம். பின் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் யூதர்கள் விரிவடைந்த இஸ்ரேலை உருவாக்கினர்.

50 இஸ்லாமிய நாடுகளுக்கு நடுவே இஸ்ரேல் மட்டும்தான் ஒரேயொரு யூத நாடு. அதுவும் இஸ்லாமிய நாடான பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து, கடந்த 75 ஆண்டுகளில் பெரிய அளவில் விரிவடைந்ததில்தான் இஸ்ரேல்-மேற்கு நாடுகளின் வெற்றி அரசியல் இருக்கிறது. இப்படி இருக்கையில் பாலஸ்தீன விடுதலைக்காக சில இயக்கங்களும் உருவாகின. இதிலிருந்து ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வந்ததுதான் ஹமாஸ் எனும் அமைப்பு. இதுதான் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இதற்கு எதிராக இஸ்ரேல் தற்போது பதில் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள 900 இந்திய வீரர்களின் நிலை என்ன என்கிற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. இந்திய வீரர்களுக்கு லெபனானில் என்ன வேலை? என்பது இயல்பான கேள்விதான். அதாவது கடந்த 1978ம் ஆண்டு லெபனானிலிருந்து இஸ்ரேலிய படையை வெளியேற்றுவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இரண்டு தீர்மானங்களை போட்டது. இதனையடுத்து சர்வதேச அமைதியை மீட்டெடுக்க ஐநா இடைக்கால படை (UNIFIL) உருவாக்கப்பட்டது. இந்த படையில் 44 நாடுகளை சேர்ந்த 10,250 வீரர்கள் இருக்கின்றனர்.
இவர்கள் ப்ளூ லைன் எனப்படும் நீல கோட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2000ம் ஆண்டு இஸ்ரேல் படைகள் லெபனானிலிருந்து திரும்பப்பெறப்பட்டன. இதனை குறிக்கும் வகையில் 120 கி.மீ நீலத்திற்கு நீல நிறத்தில் கோடு வரையப்பட்டுள்ளது. இந்த கோட்டினை கடப்பது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறுவதாகும். இந்த இடத்தில் பாதுகாப்பு பணிக்காக வீரர்களை அனுப்பிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 1978ம் ஆண்டிலிருந்து வீரர்களை இந்தியா இங்கு அனுப்பி வருகிறது. அதேபோல இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே உள்ள கோலன் குன்றுகளில் ஐ.நா துண்டிப்புப் படைக்காக 200 இந்திய வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்படி இருக்கையில்தான் இந்த நீல நிற கோடு உள்ள தெற்கு லெபனானில் ஐநா படை தளத்திற்கு அருகில் ராக்கெட் தாக்குதல் நேற்று நடந்திருக்கிறது. ஏற்கெனவே லெபனானை ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுடன் அடிக்கடி சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில் ராக்கெட் விழுந்தது ஐநா வீரர்களிடையே பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இது குறித்து லெபனான் பிரதமர் நஜிப் மிகடி, ஐநா படை தளபதியை அணுகி இந்த விவகாரம் குறித்து விசாரித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தெரியவந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் லெபனான், ஐநா படைகளுடன் நிற்பதாக தனது ஆதரவை நஜிப் மிகடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications