"இந்தியாவுக்கு அருகே.." அடுத்த நிலநடுக்கம் எங்கே? துருக்கி பூகம்பத்தை துல்லியமாக கணித்தவர் பகீர்
ஆம்ஸ்டர்டாம்: துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கங்களைத் துல்லியமாகக் கணித்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஆய்வாளர், அடுத்து எங்கே நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறித்த பகீர் கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப். மாதம் மிக மோசமான நிலநடுக்கம் ஒன்று துருக்கி மற்றும் சிரியாவில் தாக்கியது. முதலில் ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் அங்கே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இதில் துருக்கியில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல சிரியாவில் சுமார் 8476 பேர் உயிரிழந்தனர். சமீப காலங்களில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது இருக்கிறது.
எங்கே ஏற்படும்: இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தைத் துல்லியமாகக் கணித்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், அடுத்து எங்கே நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வே என்ற அமைப்பில் ஆய்வாளராக உள்ள ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் அடுத்த நிலநடுக்கம் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் ஏற்படும் எனக் கணித்துள்ளார். அதேநேரம் இதனால் இந்தியாவுக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தகவல்களை அவர் பகிரவில்லை.
பாகிஸ்தானில் சில பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளது. இது அங்கே விரைவில் வலுவான நடுக்கம் ஏற்பட இருப்பதையே காட்டுவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கடந்த செப். 30ஆம் தேதி பாகிஸ்தானில் சில பகுதிகளை வளிமண்டல ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளது.
எப்படிச் சொல்கிறார்: இது அங்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். மொராக்கோவில் முன்பு இதேதான் நடந்தது. அதேநேரம் பாக். நாட்டில் கண்டிப்பாக நிலநடுக்கம் ஏற்படும் எனச் சொல்ல முடியாது" எனப் பதிவிட்டுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை இவர் துல்லியமாகக் கணித்த நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நிலஅதிர்வுகள் அதிகம் ஏற்படும் நாடுகள் பகுதியிலேயே பாகிஸ்தான் அமைந்துள்ளது. எனவே, இங்கே பூகம்பம் வருவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. பலுசிஸ்தானின் சாமன் பகுதியில் உள்ள பகுதிகளிலும் மின்காந்த அலைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதாகவும் SSGEOS அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வலுவான நிலநடுக்கம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
பரபரப்பு: இவரது கணிப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிக மோசமாக இருந்த நிலையில், இது இணையத்தில் உடனடியாக பேசுபொருள் ஆனது. இதற்கிடையே ஹூகர்பீட்ஸ் இது தொடர்பாக மற்றொரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதாவது அறிகுறிகள் இருந்தாலும் கூட உறுதியாகப் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படும் எனச் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பொய்துபோகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் ஹூகர்பீட்ஸின் கணிப்புகள் சரியாக இருந்தாலும் கூட, ஆய்வாளர்கள் இதை முழுமையாக ஏற்கவில்லை. நிலத்திற்கு அடியில் இருக்கும் டெக்டானிக் பிளேட்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் மோது நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. பெரும்பாலான பூகம்பங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலேயே நடக்கிறது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு உட்பட எந்த ஆய்வு நிறுவனமும் இதுவரை பெரிய பூகம்பத்தை முன்கூட்டியே கணித்தது இல்லை. இதனால் ஹூகர்பீட்ஸின் கணிப்புகள் அதிகாரப்பூர்வமானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
டெல்லி நிலநடுக்கம்: இவர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கும் நிலையில், இன்று மதியம் தலைநகர் டெல்லியில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளத்தில் உணரப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள் நான்கு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது.
முதல் பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவான நிலையில், பிறகு 25 நிமிடம் கழித்து 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து மூன்றாவதாக 3.8 ரிக்டரில் ஒரு நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து 13 நிமிடங்கள் கழித்து இறுதியாக 3.1 ரிக்டரில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிலும் பூகம்பம்: அதேபோல ஜப்பானில் உள்ள இஸூ தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது. உள்ளூர் நேரப்படி மதியம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அக்கம் பக்கத்திலும் உணரப்பட்டது.












Click it and Unblock the Notifications