மொத்தமாக மாறிய சர்வதேச அரசியல்! இறங்கி வந்த நெதன்யாகு! போர் நிறுத்ததிற்கு உண்மையில் என்ன காரணம்
டெல் அவிவ்: ஹமாஸை அழிப்பது மட்டுமே நோக்கம் என்று முதலில் சொன்ன இஸ்ரேல் இப்போது பிணையக் கைதிகளைக் காக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டில் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய சரமாரி தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், அப்போது 240 பேரை ஹமாஸ் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது.

அப்போது சர்வதேச அளவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்த போதிலும், இந்தளவுக்குப் பயங்கரமான தாக்குதலை யாருமே எதிர்பார்க்கவில்லை.
பெஞ்சமின் நெதன்யாகு: இது இஸ்ரேலைக் குறிப்பாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடுமையாகக் கொந்தளிக்க வைத்தது. அன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, ""ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய ராணுவம் முழுமையாக அழிக்கப்படும். இதுதான் எங்கள் இலக்கு" என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர் பிணையக் கைதிகள் குறித்து எதுவும் கூறவில்லை. அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து அங்கே போர் குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அப்போதும் கூட அவர் பிணையக் கைதிகள் குறித்து எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. பிணையக் கைதிகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வாய் திறக்க இரண்டு வாரங்கள் ஆனது. அப்போது முதல்முறையாகப் பிணையக் கைதிகள் குறித்துப் பேசிய நெதன்யாகு, "போருக்கு நாங்கள் இரண்டு இலக்குகளை வைத்துள்ளோம். ஒன்று ஹமாஸை ஒழிப்பது. அடுத்து அனைத்து பிணையக் கைதிகளையும் பாதுகாப்பாக அழைத்து வருவது. இதற்கு நாங்கள் அனைத்தையும் மேற்கொள்வோம்" என்றார்.
பிணையக் கைதிகள் முக்கியம்: பிணையக் கைதிகள் பற்றி முதலில் குறிப்பிட மறுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அதன் பிறகு பிணையக் கைதிகள் விடுவிப்பது எங்கள் இலக்கு என்ற நிலைக்கு வந்துள்ளார். இதற்கு முக்கிய காரணமே பிணையக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் போட்ட அழுத்தம் தான்.
அவிச்சை ப்ரோடுட்ச் என்பவரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை ஹாமஸ் கடத்திச் சென்றிருந்தது. இதனால் அவர், "எனது குடும்பம் காசாவில் உள்ளது" என்ற பதாகையுடன் இஸ்ரேல் தலைநகர டெல் அவிவில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வெளியே நின்று தனியாகப் போராடத் தொடங்கினார். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது. பலரும் அவருடன் இணைந்து பிணையக் கைதிகளை விடுவிக்கப் போராட்டத்தில் இறங்கினர்.
தனி அமைப்பு: பிணையக் கைதிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி தனியாக அமைப்பும் தொடங்கப்பட்டது. இஸ்ரேல் தலைநகரில் அவர்கள் ஒன்றுகூடி போராட்டத்தை நடத்த ஆரம்பித்தனர். தொடர்ச்சியாக இஸ்ரேல் தலைநகரில் போராட்டம் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்த்தனர். மேலும், நியூயார்க் தொடங்கிப் பல சர்வதேச நகரங்களில் பிணையக் கைதிகள் குறித்து பில் போர்டுகளை வைத்து சர்வதேச அளவில் இது குறித்துப் பேச வைத்தனர்.
இஸ்ரேல் நாட்டில் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் பலர் இரட்டை குடியுரிமை வைத்திருந்தார்கள். அதாவது அவர்கள் இஸ்ரேல் நாட்டின் குடிமக்களாக இருக்கும் அதே நேரத்தில் வேறு நாட்டுக் குடிமக்களாகவும் இருப்பார்கள். இதனால் அந்த சர்வதேச நாடுகளின் அழுத்தமும் இஸ்ரேலுக்கு வந்தது. இவை அனைத்துமே சேர்த்துத் தான் இஸ்ரேலின் நிலைப்பாட்டைப் பிணையக் கைதிகள் நோக்கித் திரும்பியது.
போர் தொடங்கி முதலில் சில வாரங்களுக்கு ஹமாஸை முழுமையாக அழிப்பது மட்டுமே இஸ்ரேல் நோக்கமாக இருந்தது. அதன் பிறகு எழுந்த அழுத்தம் காரணமாகவே ஹமாஸை அழிப்பதைத் தாண்டி பிணையக் கைதிகளும் முக்கியம் என்ற நிலைக்கு வந்தது. இப்போது இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் வரவும் இந்த அழுத்தமே காரணமாக இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications