"சாகும் வரை அதிபர்..!" ஜி ஜின்பிங் போட்டிருக்கும் ஸ்கெட்ச்! சீனாவில் சத்தமின்றி நடக்கும் சம்பவங்கள்
பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய மாநாடு நடைபெறும் நிலையில், ஜி ஜின்பிங் பக்காவாக பிளான் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார்.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியே பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அங்கு அக்கட்சியைச் சேர்ந்தவர்களே தலைமை பொறுப்புக்குக் கொண்டு வரப்படுவார்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, அங்கு நாளை தொடங்க உள்ளது. இதில் ஜி ஜின்பிங் வைத்துள்ள திட்டம் குறித்து பார்க்கலாம்.

சீனா
அண்டை நாடான சீனாவில் ஜனநாயக ஆட்சி முறை இல்லை என்பதால் தேர்தல் மூலம் அங்கு ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியே அங்கு ஆட்சியில் உள்ளது. அங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் தான் அதிபர் யார் என்பது தேர்வு செய்யப்படும். இந்த மாநாடு சீன தலைநகர் பெய்ஜிங்கில் நாளை தொடங்குகிறது.

மாநாடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த அமைப்பு கருதப்படுகிறது. பொதுவாக 5 அல்லது 6 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் 2,300 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். அனைத்து தரப்பு மக்கள், பல துறை வல்லுநர்கள், அனைத்துக்குழு பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் இந்த குழு இருக்கும். இதில் தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

எதிர்காலம்
இந்த மாநாட்டில் சீனாவின் எதிர்காலம் குறித்த முக்கியமான வழிகாட்டுதல்கள் இடம் பெற்று இருக்கும். மாநாட்டின் தொடக்கத்தில் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடந்து வந்த பாதை குறித்தும் எதிர்காலத்திற்கான திட்டம் குறித்தும் விளக்குவார். இந்த முறை அவர் ஜீரோ கோவிட் கொள்கை எவ்வளவு காலம் தொடரும் என்பதை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழு
இந்த மாநாட்டின் முடிவில் 200 பேரைக் கொண்ட புதிய பொதுக் குழுவைக் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும். இதில் நாட்டின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் இருப்பார்கள். அதன் பின்னர் இந்த பொதுக் குழு பொலிட்பீரோ (20-25 பேர்), பொலிட்பீரோ நிலைக்குழு (7-9 பேர்), மற்றும் ஒரு பொதுச்செயலாளரைத் தேர்வு செய்வார்கள். கடந்த 2012 முதல் அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாகப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

அதிபர் பதவி
சீனாவில் அதிபருக்கு அதிகபட்ச வயது என்று எதுவும் இல்லை. ஒருவர் இரு முறை தான் அதிபராக இருக்க வேண்டும் என்ற விதியும் 2018இல் சத்தமில்லாமல் நீக்கப்பட்டது. பல ஆண்டுகளாகவே அங்கு எந்தவொரு தலைவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியில் தொடர்ந்தது இல்லை. இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் 10 ஆண்டுகளுக்குப் பின் அதிபர் பதவியில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள். அப்படி 2012இல் அதிபராக இருந்த ஹு ஜிண்டாவோ தனது பதவியை ராஜினாமா செய்ததால் தான் ஜி ஜின்பிங்கிற்கு அதிபர் பதவி கிடைத்தது.

ஜி ஜின்பிங் ஆதிக்கம்
இருப்பினும், 69 வயதான ஜி ஜின்பிங் இப்போதைக்கு அதிபர் பதவியில் இருந்து ஒதுங்குவதாகத் தெரியவில்லை. அவர் அதிபரானது முதலே கட்சியில் செல்வாக்கை அதிகரித்தார். தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை அளித்த அவர், தன்னை எதிர்ப்பவர்களை ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் கட்சியில் இருந்தே தூக்கிவிட்டார். இப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அவருக்கு எதிராக யாரும் இல்லை என்பதால் ஜி ஜின்பிங் அதிபராவதை எதிர்க்க யாரும் இல்லை என்றே கூறலாம்.

பிளான்
சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரைத் தலைவர் பதவி என்பது 1982இல் நீக்கப்பட்டது. கட்சியைத் தாண்டி எந்தவொரு நபரும் வரக் கூடாது என்பதால் இந்தப் பதவி நீக்கப்பட்டது. சீனாவின் தந்தை எனப்படும் மாவோ வகித்த பதவி இது. இப்போது பொதுச்செயலாளராக இருக்கும் ஜி ஜின்பிங் இந்த மாநாட்டில் மீண்டும் தலைவர் பதவியை உருவாக்கி, அந்த பதவியை அடையத் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் உயிரிழக்கும் வரை அவரால் அதிபராக இருக்க முடியும்.

எதிர்ப்பு
இருப்பினும், முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் ஜி ஜின்பிங் ஆட்சிக் காலத்தில் தான் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து உள்ளது. மேலும், ஜீரோ கொரோனா உள்ளிட்ட கொள்கையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அரிய நிகழ்வாக ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராகக் கூடாது என்று போராட்டம் கூட நடைபெற்றது. இந்தச் சூழலில் கம்யூனிஸ்ட் மாநாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications