சூனியக்காரி சாயலில் இருந்த பிரேசில் பெண் அடித்துக் கொலை... பேஸ்புக் போட்டோவால் விபரீதம்
ரியோ டி ஜெனிரோ: பேஸ்புக்கில் வெளியான சூனியக்காரியை போன்ற முகச்சாயலில் இருந்ததால் பிரேசிலில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டின் கவுர்ஜா நகரை அடுத்த சவ்பலோவை சேர்ந்த பேபினோ மரியா (33) என்ற பெண் மீது குழந்தைகளை கடத்துகிறார் என்ற குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவர் சூனியக்காரி என சந்தேகித்த அக்கம்பக்கத்தார், கடந்த வாரம் கும்பலாகச் சென்று மரியாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் பேஸ்புக்கில் வெளியான ஒரு படத்தில் ‘இவர் சூனியக்காரி குழந்தைகளை கடத்துபவர் எச்சரிக்கையாக இருங்கள்' எனக் கூறப்பட்டு இருந்துள்ளது. அப்படத்தில் இருந்த பெண்ணின் முகம் மரியாவின் உருவத்தை ஒத்து இருந்ததால் சந்தேகத்தின் பேரில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், மரியாவின் மீது குற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை என போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் இந்த தாக்குதலுக்கு தங்கள் தளத்தில் வெளியிட்ட தகவல் காரணம் அல்ல என பேஸ்புக் நிர்வாகம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.