கலவரத் தடுப்புப் போலீஸ்காரருக்கு முத்தம் கொடுத்து வழக்கில் சிக்கிய பெண்
டுரின், இத்தாலி: இத்தாலியில் ஒரு பெண் வினோதமான வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீ்து பாலியல் தாக்குதல் வழக்கைப் போலீஸார் போட்டுள்ளனர். அவர் செய்த தவறு - கலவரத் தடுப்புப் போலீஸ்காரர் ஒருவருக்கு முத்தம் கொடுத்ததே.
அந்தப் பெண்ணின் பெயர் நினா டி சிப்ரே. இவர் ஒரு மாணவி. இத்தாலியின் டுரின் நகரில் கடந்த நவம்பர் மாதம் ஒரு போராட்டம் நடந்தது. அதைத் தடுக்க வந்த கலவரத் தடுப்புப் போலீஸ்காரர் சல்வடோர் பிக்காசின் என்பவரின் ஹெல்மெட்டைப் பிடித்து முத்தம் கொடுத்தார் நினா.
இதை பாலியல் தாக்குதல் சம்பவமாக கருதி தற்போது நினா மீது போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர்.
போராட்டத்தில் வன்முறை வெடித்து விடாமல் தடுக்க வந்த போலீஸ் படையில் இடம் பெற்றிருந்த சால்வடோருக்கு அவர் முத்தம் கொடுத்ததற்காக, அதுவும் ஹெல்மெட்டில் முத்தம் கொடுத்ததற்காக இப்படி ஒரு வழக்கா என்று பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நினா முத்தம் கொடுக்கும் படம் இன்டர்நெட்டில் காட்டுத் தீ போல பரவி பிரபலமாகி விட்டது. இது அமைதியின் அடையாளம் என்று பலரும் அந்தப் புகைப்படத்தையும், நினாவின் செயலையும் வர்ணித்துள்ளனர்.
ஆனால் போலீஸார் இதை விரும்பவில்லை. நினா மீது வழக்குப் போட்டு விட்டனர். போலீஸ் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் போடப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து அந்த சங்கம் கூறுகையில், ஒரு போலீஸ்காரர் பணியில் இருக்கும்போது ஒரு பெண் முத்தம் கொடுத்ததை பலரும் ரசிக்கின்றனர். இதுவே அந்த போலீஸ்கார், அப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருந்தால் அல்லது அவரது முதுகில் தட்டிக் கொடுத்திருந்தால்... என்ன நடந்திருக்கும். பெரிய கூச்சலே போட்டிருப்பார்கள். ஏன், 3ம் உலகப் போரே வந்திருக்கும் என்று கூறியுள்ளனர்.
நினா முத்தம் மட்டும் கொடுக்கவில்லை. தனது விரல்களை நாவால் வருடி அந்த விரலை போலீஸ்காரரின் வாயில் வேறு வைத்து எடுத்தார். இதனால்தான் போலீஸ் சங்கம் புகார் கொடுத்து விட்டதாம்.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் கூறுகையில், நான் அப்பெண்ணை தூண்டும் வகையில் எதுவும் செய்யவில்லை. அவராக வந்து அப்படியெல்லாம் செய்தார்.. என்றார் சிரித்தபடி.
நினா முத்தம் கொடுத்தபோது சால்வடோர் அதைத் தடுக்க முயலாமல் கண்ணை மூடியபடி இருந்தது குறிப்பிடத்தக்கது.