பூமிக்கு வர காசில்லை.. பாட்டியை ஏமாற்றி ரூ.24லட்சத்தை அபேஸ் செய்த போலி விண்வெளிவீரர்!
விண்வெளி வீரர் எனக் கூறி ஜப்பானில் மூதாட்டியை ஏமாற்றி ரூ. 24 லட்சம் பணம் பறித்துள்ளார் ஒரு நபர்.
டோக்கியோ: பூமிக்குத் திரும்ப பணமில்லை எனக் கூறி, விண்வெளி வீரர் என்ற பெயரில் ஜப்பானில் வயதான மூதாட்டியை திருமண ஆசை காட்டி ஏமாற்றி ரூ. 24 லட்சம் பணம் பறித்துள்ளார் இளைஞர் ஒருவர்.
காதல் வார்த்தைகள் சொல்லி, திருமண ஆசை காட்டி, பணம் பறிக்கும் மோசடி கும்பலைப் பற்றி அடிக்கடி செய்திகளில் படித்திருப்போம். பெரும்பாலும் தொழில், குடும்பச் சூழல் போன்றவற்றை மாற்றிக் கூறிதான் ஏமாற்றுவார்கள். ஆனால் ஜப்பானில் நடந்திருக்கும் இந்த மோசடி வித்தியாசமானது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், வானம் வரை யோசித்து இப்படி ஒரு மோசடியை அந்த இளைஞர் செய்திருக்கிறார் போலும். வழக்கம்போல, சமூகவலைதளம் மூலம்தான் இந்த மோசடியும் அரங்கேறியுள்ளது.
போலி விண்வெளி வீரர்
ஏமாற்றப்பட்ட அந்த மூதாட்டிக்கு வயது 65. இன்ஸ்டாகிராமில் ஆர்வத்துடன் இயங்கி வரும் அவருக்கு, சமீபத்தில் ஒருவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். தன்னை ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிவதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
ஏமாந்த மூதாட்டி
தன்னை அப்பெண் நம்ப வேண்டும் என்பதற்காக சில விண்வெளி புகைப்படங்களையும் அவருக்கு அந்நபர் அனுப்பி இருக்கிறார். இதனால் நிஜமாகவே அந்நபர் விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர் என நம்பி விட்டார் அந்த மூதாட்டி. எனவே தொடர்ந்து அவரிடம் சமூகவலைதளம் வாயிலாக நட்பாக பேசி வந்துள்ளார்.
திருமண ஆசை
இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்நபர், 'பூமிக்கு திரும்பி வர தன்னிடம் போதிய பணம் இல்லை' என ஏதோ பஸ்ஸுக்கு காசில்லை என்பதுபோல் கதைவிட்டுள்ளார். அதோடு, தனக்கு உதவி செய்தால், பூமிக்குத் திரும்பியதும் அவரையே திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
சந்தேகம்
அந்நபர் கூறிய அனைத்தையும் உண்மை என நம்பி இருக்கிறார் அப்பெண். எனவே, கடந்த ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 5 வரையான காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, ஐந்து தவணைகளில் சுமார் $30,000 ( இந்திய மதிப்பில் ரூ. 24,69,891) பணத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து பணம் கேட்டு அந்நபர் நச்சரிக்கவே, அப்பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
போலீசில் புகார்
எனவே, அந்நபர் தொடர்பாக போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் மூலம்தான் இந்த மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தளவிற்கெல்லாம் யோசித்து ஏமாற்றுவார்களா? என அதிர்ச்சி தருகிறது இந்த சம்பவம். சமீபகாலமாக ஜப்பானில் காதல் மோசடிகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.