‛‛ஆண்களின் நிர்வாண திருவிழா’’.. ஜப்பானில் 1675 ஆண்டுகளாக நடக்கும் நிகழ்ச்சி.. பெண்கள் பங்கேற்க அனுமதி
டோக்கியோ: ஜப்பானில் 1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் ‛ஹட்கா மட்சூரி' எனும் ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த திருவிழா கொண்டாடப்படுவதன் பின்னணி குறித்த வினோத தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பாரம்பரியமாக சில திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாக்கள் வெறும் பொழுது போக்குகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது.

அந்த வகையில் ஜப்பானில் ஆண்டுதோறும் வினோத திருவிழா ஒன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது அந்த திருவிழாவின் பெயர் ஆண்களுக்கான நிர்வாண திருவிழாவாம்.
ஜப்பானில் கொண்டாடப்படும் இந்த வினோத திருவிழாவின் உண்மையான பெயர் ‛ஹடகா மட்சூரி'. இதனை ஆண்களின் நிர்வாண திருவிழா எனவும் அழைக்கின்றனர். இந்த திருவிழாவில் ஆண்கள் சிறிய அளவிலான துணியை மட்டும் உடலில் அணிந்து இருப்பார்கள். ஜப்பானின் ஐச்சி மாகாணத்தின் இனாசாவா நகரில் கொனோமியா வழிபாட்டு தலத்தில் நடந்து வருகிறது. 1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் இந்த ஆண்டுக்கான ‛ஹடகா மட்சூரி' திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் தற்போதைய இந்த விழாவில் பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 40 பெண்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்கும் பெண்கள் முழு உடை அணிந்து இருப்பார்கள். ஹேப்பி கோட் அணிந்து இருப்பார்கள். விழாவின் தொடக்கத்தில் நடக்கும் சடங்குகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ‛நோய்சாசா' என அழைக்கப்படும் சடங்கில் மட்டும் பங்கேற்பார்கள். அப்போது அவர்கள் மூங்கில் புல்லை துணியில் சுற்றி கோவிலுக்கு எடுத்து செல்லும் 'நஒயிசா' சடங்கில் மட்டுமே பங்கேற்பார்கள்.
இதுபற்றி விழா நடத்தும் கமிட்டியை சேர்ந்த மிட்சுகு கடயமாக கூறுகையில், ‛‛தொற்று பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த விழாவை நடத்த எங்களால் முடியவில்லை. ஆனால் இந்த முறை பெண்களிடம் இருந்து அதிகமான கோரிக்கைகள் வந்தது. இதனை பரிசீலனை செய்து தான் விழாவில் அவர்களை பங்கேற்க அனுமதித்து உள்ளோம்.
இந்த விழாவில் முன்காலத்திலும் பெண்களும் பங்கேற்றனர். பெண்களை யாரும் தடை செய்யவில்லை. இருப்பினும் அவர்கள் பங்கேற்காத நிலையில் ஆண்களுக்கான விழாவாக மாறிப்போனது. இப்போது பெண்கள் பங்கேற்க உள்ளனர்'' என்றார். இந்த முடிவை அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் வரவேற்றுள்ளனர். மேலும் இது தான் பாலின சமத்துவம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
அதாவது நிகழ்ச்சி தொடங்கியதும் ஆயிரக்கணக்கான ஆண்கள் சிறிய அளவிலான ஆடைகளை மட்டும் அணிந்து கொள்வார்கள். ஜப்பானில் லோயின்கிளாத் என அழைக்கப்படும் உள்ளாடையை அணிந்து 2 காலுறையை அணிந்து கொள்வார்கள். அதன்பிறகு அவர்கள் வழிபாட்டு தலத்தை சுற்றி ஓடுவார்கள். பிறகு உடலை சில்லிட வைக்கும் குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு வழிபாட்டு தலத்தை நோக்கி ஓடுவார்கள்.
இவர்கள் அங்கு சென்றவுடன் 100 மரக்குச்சிகளுக்கு நடுவே 2 அதிர்ஷ்ட மரக்குச்சிகளை பூசாரிகள் வீசுவார்கள். ஆண்கள் அனைவரும் அந்த அதிர்ஷ்ட மரக்குச்சியை தேடி எடுக்க வேண்டும். இந்த அதிர்ஷ்ட குச்சிக்காக ஆண்கள் சண்டையிட்டு கொள்வார்கள். குச்சியை எடுப்பவர் ‛ஷின் ஒடோகோ அல்லது தேர்வு செய்யப்பட்ட நபர்' என அழைக்கப்படுவர்.
இவர்கள் தலை மொட்டையடிக்கப்படும். அதன்பிறகு அவர்கள் நடந்து செல்லும்போது அவர்களை தொட்டால் கெட்ட சகுனங்கள் மறைந்த அடுத்த ஓராண்டு நல்லது நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதனால் ஆண்டுதோறும் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த முறை பெண்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications