ஹிஜாப் அணியாததால் 22 வயது பெண் கொலை.. ஈரானில் போராட்டத்தில் குதித்த பெண்களால் பரபரப்பு
தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.
அதே நேரத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்துள்ளனர். இப்போராட்டம் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

ஹிஜாப் கட்டாயம்
இஸ்லாமிய சமயநெறிகளை கராராக பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் ஈரானும் ஒன்று. இந்நாட்டில் பெண்கள் 9 வயது முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமயநெறிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையில் 'கலாச்சாரப் பிரிவு' ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஹிஜாப் அணிவது, தொழுகைகளை முறையாக செய்வது ஆகியவை பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிப்பார்கள். மேலும் இஸ்லாமிய மத நெறிமுறைகளை அவமதிக்கும் செயல்பாடுகளையும் கண்காணித்து அதற்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வார்கள்.

படுகொலை
இப்படியாக இருக்கையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குர்திஸ்தானை சேர்ந்தவர் மாஷா அமினி (வயது 22) ஒருவர் தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பரிசோதனை செய்த கலாச்சார காவல் குழுவினர், ஹிஜாப்பை சரியாக அணியவில்லையென்று மாஷா அமினி மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன.

போராட்டம்
இதனால் மயக்கமடைந்த மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று மாஷா அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச்சூடு
இதில் ஆளும் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய அவர்கள், தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்றி எறிந்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலாச்சார காவலர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாகிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இது குறித்து அந்நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் இது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து, அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டு அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications