ஹிஜாப்பை அறுத்து! தலையை மழித்து! ஈரான் சாம்ராஜ்ஜியத்தை உலுக்கிய "பெண்களின் முடி"! ஆண்களும் சப்போர்ட்
டெஹ்ரான்: ஈரானில் நடைபெறும் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்திலும் ஆண்களும் கலந்து கொண்டு உள்ளனர். பல இடங்களில் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதே ஆண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் 1979 இஸ்லாமிய புரட்சிக்கு பின்பாக சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டன. அதன்படி பெண்களுக்கு ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. முடி வெளியே தெரிய கூடாது, அதேபோல் உடலில் நெருக்கமான உடைகளை அணிய கூடாது என்று கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
அதோடு அங்கு கலாச்சார போலீஸ் என்று அழைக்கப்படும் Morality police உருவாக்கப்பட்டது. இந்த போலீஸின் வேலை அங்கு பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை பாதுகாப்பது.
அதாவது பெண்கள் சரியாக ஹிஜாப் அணிந்து உள்ளார்களா, சரியாக உடை அணிந்து இருக்கிறார்களா என்று இந்த கலாச்சார போலீஸ் ஆய்வு செய்யும். அத்து பெண்களின் முடி வெளியே தெரிகிறதா என்பதையும் இந்த குழுதான் ஆய்வு செய்யும்.

என்ன நடந்தது?
இந்த கடுமையான ஹிஜாப் சட்டத்தை எதிர்த்து கடந்த சில வருடங்களாகவே பெண்கள் போராட்டம் செய்து வருகின்றனர். 2014ல் இருந்தே பெண்கள் அங்கு தீவிரமாக கடுமையான ஹிஜாப் கட்டுப்பாடுகளை எதிர்த்து போராடி வருகின்றனர். அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக 2014 லேயே இணையத்தில் பெண்கள் பலர் ஹிஜாப் இன்றி போட்டோ எடுத்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு அவர்கள் "My Stealthy Freedom" என்று பெயர் வைத்தனர். அதன்பின் "White Wednesdays" மற்றும் "Girls of Revolution Street" போன்ற போராட்டங்களும் ஹிஜாப்பிற்கு எதிராக ஈரானில் நடைபெற்றது.

மரணம்
இந்த நிலையில்தான் தற்போது அங்கு ஹிஜாப்பிற்கு எதிரான கடுமையான போராட்டங்கள் மீண்டும் தொடங்கி உள்ளன. இதற்கு காரணம் ஹிஜாப் காரணமாக அங்கு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது. ஈரானில் கடந்த சில நாட்களுக்கு முன் 22 வயது மாசா அமினி என்ற மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கடந்த செப்டம்பர் 13ம் தேதி இவர் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்ற போது அங்கு "கலாச்சார போலீசார்" மூலம் கைது செய்யப்பட்டார். அவர் சரியாக ஹிஜாப்பை அணியாமல், முடி வெளியே தெரியும்படி ஹிஜாப் அணிந்து இருந்ததால் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.

கொலை
தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் மோசமாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே இவரின் தலையில் இரும்பு கம்பியை வைத்து அடித்தார்கள் என்று கூறப்படுகிறது. அவரை கடுமையாக தலையிலேயே அடித்து உள்ளனர். அதோடு தலை முடியை சேதம் செய்து உள்ளனர். இந்த தாக்குதலில் அவர் கோமா நிலைக்கு சென்றார். அதோடு அங்கே இருந்த வாகனம் ஒன்றில் அமினியின் தலையை முட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில்தான் அவருக்கு இதய பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் . இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

மரணம்
அவரின் உடலை முழுமையாக பார்க்க கூட அவரின் பெற்றோருக்கு கலாச்சார போலீஸ் அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம்தான் அங்கு மிகப்பெரிய போராட்டத்தை உருவாக்கி உள்ளது. கடுமையான ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் 31 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மொத்தம் 80 நகரங்களில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக குர்தீஷ் பிரிவு மக்கள் இடையே போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

முடி வெட்டும் போராட்டம்
முக்கியமாக பெண்கள் அங்கே முடி வெட்டும் போராட்டங்களை செய்து வருகிறார்கள். என் முடி தானே உனக்கு பிரச்சனை. இதோ முடியை வைத்துக்கொள் என்று கூறி முடியை வெட்டி போராட்டம் செய்து வருகின்றனர். அதேபோல் தங்களின் ஹிஜாப்பை கிழித்து அதை தீயில் போட்டும் போராட்டம் செய்து வருகின்றனர். எந்த கலாச்சார போலீஸ் லேசாக முடி தெரிந்த காரணத்திற்காக கொலை செய்ததோ அதே கலாச்சார போலீஸ் முன் பல ஆயிரம் பெண்கள் ஒன்றாக கூடி ஹிஜாப் இன்றி போராடி வருகின்றனர்.

போலீஸ் மறுப்பு
இந்த போராட்டம் உச்சம் அடைந்து உள்ள நிலையில், நாங்கள் அந்த பெண்ணை கொலை செய்யவில்லை என்று ஈரான் கலாச்சார போலீஸ் மறுத்து உள்ளது. நாங்கள் அவரை கைது மட்டுமே செய்தோம். விசாரணை செய்தோம். அவர் மீது தாக்குதல் எல்லாம் நடத்தவில்லை. அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. அதனால்தான் அவர் மரணம் அடைந்தார் என்று விளக்கம் அளித்து உள்ளனர்.

கோரிக்கை
இந்த போராட்டம் தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மீனா ஹாரிஸ் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது தலை முடியை வெட்டி அவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தில், "Edalat, Azadi, hijab-e ikhtyari" (Justice, Freedom, and A Free Choice on Hijab) என்ற வாசகம் அதிக கவனம் பெற்றுள்ளது. அதாவது நீதி, சுதந்திரம், ஹிஜாப்பை அணிவதில் தனிப்பட்ட தேர்வு என்ற தலைப்பில் போராட்டம் நடக்கிறது. அதாவது ஹிஜாப்பை அணிய வேண்டுமா கூடாது என்பதை நாங்கள்தான் சுதந்திரமாக முடிவு செய்வோம் என்று மக்கள் கூறி உள்ளனர்.

ஆண்கள்
டெத் டூ டிக்டேட்டர் என்ற பெயரில் அதாவது சர்வாதிகாரிக்கு மரணம் என்ற பொருளிலும் இந்த போராட்டத்தில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆண்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த கடுமையான சட்ட திட்டங்கள் தவறு என்று ஆதரவு தெரிவித்து உள்ளனர். தங்கள் வீட்டு பெண்களுக்கு ஆதரவாக அவர்கள் குதித்து உள்ளனர். பல இடங்களில் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதே ஆண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications