பிரான்ஸில் உலக தலைவர்கள், 37 லட்சம் பேர் பங்கேற்ற ஒற்றுமை பேரணி
பாரீஸ்: தீவிரவாதத்திற்கு எதிராக பாரீஸில் நடந்த ஒற்றுமை பேரணியில் 37 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் உலக தலைவர்களும் பங்கேற்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த வாரம் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 17 பேர் பலியாகினர். இதை கண்டித்து பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 7 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதலை கண்டித்து பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை பேரணி நடைபெற்றது. Place de la Republique என்ற இடத்தில் துவங்கிய பேரணி Place de la Nation என்ற இடத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், இஸ்ரேல் பிரகமர் பெஞ்சமின் நேதன்யாஹு, பாலஸ்தீன அதிபர் மகமூது அப்பாஸ், மாலி அதிபர் இப்ராஹிம் போபக்கர், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி பாரீஸ் தவிர்த்து பிரான்ஸின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது. பிரான்ஸ் முழுவதும் நடந்த பேரணியில் 37 லட்சம் பேர் கலந்து கொண்டு விடுதலை, சார்லி என்று கோஷமிட்டனர். அதில் பாரீஸில் நடந்த பேரணியில் மட்டும் 16 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
பேரணியில் தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் குடும்பத்தார் முன்னே சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து பிறர் சென்றனர். பேரணியையொட்டி பாரீஸில் 2 ஆயிரம் போலீசார் மற்றும் 1, 350 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பிரான்ஸுக்கு வெளியே லண்டன், வாஷிங்டன், மான்ட்ரியல் மற்றும் பெர்லினிலும் தீவிரவாதத்தை எதிர்த்து பேரணி நடைபெற்றது.












Click it and Unblock the Notifications