உலகில் முதன்முதலாக.. H5N8 பறவைக் காய்ச்சல் பாதித்த நபர் - சிக்கன் பற்றி முக்கிய அறிவிப்பு
மாஸ்கோ: உலகில் முதன் முறையாக ரஷ்யாவில் ஒருவருக்கு H5N8 பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், வைரஸின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது.
குறிப்பாக, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா அதிகம் பரவி வருவதால், கொரோனா தடுப்பூசியின் வீரியம் கேள்விக்குறியாகியுள்ளது.
உலகில் முதன்முறையாக
இந்நிலையில், ரஷ்யாவில் A(H5N8) எனும் பறவைக் காய்ச்சல் வைரஸ் தனது முதல் கணக்கை பதிவு செய்துள்ளது. பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் உலகில் முதன்முறையாக ரஷ்யாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (WHO), நுகர்வோர் சுகாதார கண்காணிப்புக் குழுவின் தலைவர் அன்னா போபோவா சனிக்கிழமை தெரிவித்தார்.
மனிதர்களுக்கு பரவும்
கடந்த சில மாதங்களாக ரஷ்யா, ஐரோப்பா, சீனா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் H5N8 வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கோழிகளில் மட்டுமே கண்டறியப்பட்டது. அதேசமயம், H5N1, H7N9 மற்றும் H9N2 வகை வைரஸ்கள் அங்கு மனிதர்களுக்கு பரவுகின்றன.
மனிதர்கள் இடையே
இந்நிலையில், ரஷ்யாவில் A(H5N8) எனும் பறவைக் காய்ச்சல் வைரஸ் முதல் முறையாக மனிதருக்கு பரவியுள்ளது. எனினும், இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவதாக அறிகுறிகள் இல்லை என்று அன்னா போபோவா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி
பெரும்பாலும், பறவைக் காய்ச்சல் வைரஸ், பாதிக்கப்பட்ட அல்லது இறந்த கோழிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவலாம். ஆனால், கோழியை முறையாக சமைத்து சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபீரியாவின் வெக்டர் நிறுவனம் H5N8க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணிகளை தொடங்கிவிட்டதாக RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.