ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகல்.. உலக பணக்காரர்களுக்கு பெரும் இழப்பு
லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்து சென்றதால் உலக பணக்காரர்களில் 400 க்கும் மேற்பட்டவர்களின் பங்குகளில் 127.4 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதா? அல்லது நீடிப்பதா என்பதை முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் முடிவில் பிரிட்டன் வெளியேறும் முடிவுக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு கிடைத்தது.
வாக்கெடுப்பு முடிவில் 51.9 சதவிகிதம் மக்கள் வெளியேறலாம் என்றும், 48.1 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மையோர் கருத்தின் அடிப்படையில் பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
வாக்கெடுப்பின் முடிவு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே ஆசியப்பங்குச்சந்தை, இந்திய பங்குச்சந்தை உள்ளிட்ட உலகின் பல்வேறு பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. அதன் தாக்கத்தினால் உலக பணக்காரர்களில் 400 க்கும் மேற்பட்டவர்களின் பங்குகளில் 127.4 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவை சந்தித்தன.
இந்நிலையில் உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமென்சியோ ஒர்டிஹாவின் பங்குகள் சுமார் 6 பில்லியன் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. மேலும் பில்கேட்ஸ், ஜெப் பிஸோஸ் உள்ளிட்ட 9 பேரின் பங்குகளும் சுமார் 1 பில்லியன் அளவுக்கு சரிவு கண்டுள்ளன.