யாசர் அராபத் விஷம் கொடுத்துக் கொல்லப்படவில்லை: ரஷ்ய ஆய்வுக்குழு
மாஸ்கோ: பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் மரணம் இயற்கையானது, அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்படவில்லை என ரஷ்ய நாட்டு நிபுணர் குழுவும் அறிக்கை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி தமது 75-வது வயதில் பிரான்ஸ் நாட்டில் இறந்தார். ஆனால், அவரது மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அப்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஆனால் 2006-ம் ஆண்டில் ரஷ்யாவின் முன்னாள் உளவுத்துறை பிரிவினரும், ரஷ்ய அரசின் விமர்சகருமான அலெக்சாண்டர் லிட்வினென்கோ படுகொலை செய்யப்பட்டபின் அராபத்தும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
இதனால், 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவரது உடற்பகுதியில் எஞ்சியிருந்த பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளிலும் இந்த சோதனைகள் தனித்தனியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள லுசேன் சட்ட மருத்துவ மையத்தின் கதிரியக்கப் பிரிவில் பணிபுரியும் 8 விஞ்ஞானிகள் மொத்தம் 75 மாதிரிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு தங்களின் முடிவுகளை கடந்த வார இறுதியில் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் 38 மாதிரிகள் அராபத்தினுடையவை ஆகும். மீதி 37 மாதிரிகள் பத்து வருடங்களாக சுகாதாரமாகப் பாதுகாக்கப்பட்ட காட்டன் துணிகளின் மாதிரிகள் ஆகும். இவற்றில் அராபத்தின் ரத்தம், சிறுநீர்க் கறைகள் பட்டிருந்த துணிகளில் உயர் கதிர்வீச்சு தன்மை கொண்ட போலோனியம் படிமங்கள் இருந்ததை இந்தக் குழுவினர் உறுதி செய்தனர்.
இந்நிலையில் ரஷ்ய நாட்டின் நிபுணர் குழுவினரும் யாசர் அராபத்தின் உடல் உறுப்புகளை கொண்டு, அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டறிய தீவிர உடல்கூறு சோதனை நடத்தியது. இப்போது ரஷ்ய நிபுணர்குழுவும் யாசர் அராபத் விஷம் கொடுத்து கொல்லப்படவில்லை என்றும் அவரது மரணம் இயற்கையானது என்றும் அறிவித்து உள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications