ஏமனில் கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் 8 பேர் பலி
ஏதென்ஸ்: ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமன் நாட்டின் டாயிஸ் நகரில் ஈரான் நாட்டை அடிப்படையாக கொண்ட கிளர்ச்சியாளர்கள் 24 மணி நேரம் தொடர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட பொதுமக்கள் எட்டு பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கும்.

மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் மக்கள் குடியிருப்பு பகுதியில் புதுந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக கிளர்ச்சியாளர்கள் டாயிஸ் நகரில் நேற்று நடத்திய தொடர் தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஏமன் அரசு தரப்பு படையின் எதிர் தாக்குதலில் 12 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா தூதர் இஸ்மாயில் அவுல்டு செயிக் அகமது கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் கிளர்ச்சியாளர் இருதரப்பு துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு அவர் வலியுறுத்தினார். நகரின் தென்மேற்கு பகுதிகளின் குடியிருப்புகள் சிலவற்றில் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக 20 கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியுடன் முக்கிய நுழைவாயில் வழியாக கோர்மக்சர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிகாதிகள் சிலரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications