ஆவேசமான ஜெலன்ஸ்கி.. அமெரிக்கா - உக்ரைன் இடையே வெடிக்கும் மோதல்? மொத்தமாக மாறும் சர்வதேச அரசியல்?
கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தொடர்பாக இப்போது அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க எம்பி ஒருவர் கடுமையாகச் சாடிய நிலையில், இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. போரை நிறுத்த பல்வேறு தரப்பினரும் முயன்ற போதிலும், அதற்கு இதுவரை எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை.

அதிபர் ஜெலன்ஸ்கி
இதற்கிடையே கடந்த வாரம் இது தொடர்பாக ஆலோசிக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா வந்திருந்தார். அங்கு வெள்ளை மாளிகையில் அவர் அதிபர் டிரம்பை சந்தித்த நிலையில், அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து டிரம்ப் கட்சியைச் சேர்ந்த பலரும் ஜெலன்ஸ்கியை கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
அதன்படி ஜெலன்ஸ்கியை இப்போது கடுமையாக விமர்சிப்பவர்களில் முக்கியமானவர் லிண்ட்சே கிரஹாம். இவர் மீட்டிங் தொடங்கும் முன்பே ஜெலன்ஸ்கியை எச்சரித்தே அனுப்பியிருந்தார். உலகமே உற்று நோக்கும் மீட்டிங் என்பதால் தேவையற்ற விவாதத்தில் ஈடுபட வேண்டாம் என அவர் ஜெலன்ஸ்கிக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அதைக் கேட்காமல் மீட்டிங் தொடங்கியவுடன் அவர் வாக்குவாதம் செய்தார்.
அமெரிக்க எம்பி
அதைத்தொடர்ந்து லிண்ட்சே கிரஹாம் தனது விமர்சனத்தை ஆரம்பித்தார். வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய லிண்ட்சே, "ஜெலன்ஸ்கி ராஜினாமா செய்ய வேண்டும். சரியான ஒரு நபர் இருந்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். அல்லது அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். டிரம்ப் ஜெலன்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தை மோசமாக முடிந்துள்ளது. அமெரிக்கா உக்ரைன் உறவுக்கு இப்போது ஜெலன்ஸ்கி தான் தடையாக இருக்கிறார்" எனச் சாடினார்.
அத்துடன் நில்லாமல் போர் தொடங்கிய பிறகு உக்ரைனில் இதுவரை தேர்தல் நடத்தப்படாத நிலையில், அதைக் குறிப்பிட்டும் ஜெலன்ஸ்கியை விமர்சித்தார். உக்ரைனில் தேர்தல் நடத்தப்படாத வரை, உக்ரைனின் மக்கள் குரல் என்பதே இல்லை என்பது போல விமர்சித்திருந்தார். லிண்ட்சேவின் இந்த விமர்சனம் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இதற்கு ஆவேசமாகப் பதிலளித்து பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெலன்ஸ்கி ஆவேசம்
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி மேலும் கூறுகையில், "வேண்டும் என்றால் நான் அவருக்கு உக்ரைன் குடியுரிமையைக் கொடுக்கிறேன்.. அவர் உக்ரைனின் குடிமகனாக மாறி, இங்கு வந்து பார்க்கட்டும். பிறகு அவர் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்.. அதன் பிறகு அவர் உக்ரைன் குடிமகன் என்பதால் அவர் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்" என்று ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். அவரது இந்த ஆவேச பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மாறும் சர்வதேச அரசியல்
உக்ரைன் ரஷ்யா மோதல் என்பது பல காலமாக நீடித்து வரும் சிக்கலாக இருக்கிறது. இந்த சிக்கலைத் தீர்க்கவே டிரம்ப் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். ஆனால், இப்போது இதனால் உக்ரைனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்குப் பக்கபலமாக இருப்போம் என அறிவித்துள்ள நிலையில், இது சர்வதேச அரசியலையே மாற்றுவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications