"ரஷ்யாவுக்கு இருப்பதே இந்த ஒரே வாய்ப்பு தான்.." மனம் திறந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்: உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4ஆவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. ரஷ்ய வீரர்களைக் கண்டு அஞ்சாமல் உக்ரைன் தொடர்ந்து போராடி வருவதால், பல பகுதிகளில் ரஷ்ய ராணுவம் அப்படியே ஸ்தம்பித்துப் போய் உள்ளது.

உடன்பாடு இல்லை
அதேநேரம் மறுபுறம் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு நாட்டுப் பிரதிநிதிகள் குழுவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக. கடந்த மார்ச் 10ஆம் தேதி துருக்கியில் ரஷ்யா உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதன் காரணமாகவே போர் 24ஆவது நாளாக நீட்டிக்கிறது.

அதிபர் ஜெலன்ஸ்கி
பேச்சுவார்த்தையில் ரஷ்யா தரப்பு பெரியளவில் ஆர்வம் காட்டாமல் இருப்பதே போர் தொடர முக்கிய காரணம் எனப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யா தனது தவறான நடவடிக்கையால் ஏற்பட்ட ஒரே வாய்ப்பு பேச்சுவார்த்தையில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இது பேச்சுவார்த்தைக்கான நேரம். இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் சீரியஸாக ஈடுபட வேண்டும்.

பேச்சுவார்த்தை
ரஷ்யாவின் நடவடிக்கையால் இங்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதைச் சரி செய்ய ரஷ்யாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பேச்சுவார்த்தை தான். பேச்சுவார்த்தை மூலமே அவர்களால் நிலைமையை மேம்படுத்த முடியும். உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ரஷ்யா பெரிய விலை கொடுத்துள்ளது. இதை மீட்டெடுக்க ரஷ்யாவுக்குக் குறைந்தது சில தலைமுறைகளாவது ஆகும். உக்ரைனுக்கான பிராந்திய ஒருமைப்பாட்டையும் நீதியையும் மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது. இல்லையென்றால் இது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாகவே இருக்கும்.

வீரர்கள்
கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதைக் கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் மிகப் பெரிய பேரணி நடந்தது. ரஷ்யத் தலைநகரில் நடந்த பேரணியில் சுமார் 200,000 பேர் கலந்து கொண்டனர். ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் உக்ரைன் மீதான படையெடுப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அத்தனை ஆயிரம் வீரர்கள் உயிரிழக்கவும் காயமடையவும் வாய்ப்புகள் உள்ளன.

மரியுபோல் மீது தாக்குதல்
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை நம்மால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. சில நாட்களுக்கு முன், மரியுபோல் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பொதுமக்களைத் தேடும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அப்படி 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications