டிவி பேட்டியில் டிவிட்ஸ்ட்... கெத்து கட்டிய ஜிம்பாப்வே அதிபர்... குழப்பத்தில் மக்கள்
ஜிம்பாப்வே நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கவில்லை என்று ஜிம்பாப்வே அதிபர் கூறியிருக்கிறார்.
ஜிம்பாப்வே: ஜிம்பாப்வே நாட்டிற்குள் அந்த நாட்டின் ராணுவம் புகுந்து பாராளுமன்றத்தை சில நாட்களுக்கு முன் கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் அதிபர் ராபர்ட் மோகபி கைது செய்யப்பட்டு அலுவலகத்திலேயே பூட்டப்பட்டார்.
இதன் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும் அவர் டிவி முன்பு தோன்றி நேற்று தனது ராஜினாமா குறித்து உரையாற்றுவார் என்று கூறியிருந்தனர்.
ஆனால் டிவியில் பேசிய அவர், ராணுவம், மக்கள் என எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். மேலும் அவரின் பேச்சு மீண்டும் அந்த நாட்டின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
முடிவுக்கு வந்தது மோகபி ஆட்சி
1980 வருடம் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜிம்பாப்வேவில் ராபர்ட் மோகபி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒருவாரத்திற்கு முன் அந்த நாட்டின் ராணுவம் திடீர் என்று நாட்டிற்குள் புகுந்தது. மேலும் பாராளுமன்றத்திற்குள் சென்ற ராணுவம் அங்கு இருந்த அதிபர் ராபர்ட் மோகபியை கைது செய்தது. முதலில் கைதை மறுத்த ராணுவம் பின் அதிபர், வீட்டு சிறையில் இருப்பதை ஒப்புக் கொண்டது.
காரணம் இதுதான்
இந்த ராணுவ புரட்சி வெடிப்பதற்கு முக்கிய காரணம் அதிபரின் மனைவிதான் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அந்த நாட்டின் துணை அதிபர் 'எமர்சன் மனன்காக்வா' அதிரடியாக கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ராபர்ட் மோகபி மனைவி கிரேஸ் துணை அதிபராக நியமிக்கப்பட இருந்தார். சரியாக அதிபர் கைது செய்யப்பட்ட அன்று இவர் துணை அதிபராக பொறுப்பேற்க வேண்டி இருந்தது. ஆனால் அதற்குள் ராணுவம் உள்ளே நுழைந்து அதிபர் மனைவியின் கனவில் மண்ணள்ளி போட்டது.
ராணுவம் தான் பெஸ்ட்
அதிபரின் 37 வருட இந்த ஆட்சியில் முதல் 20 வருடங்கள் மிகவும் நன்றாகவே சென்றது. நாடும் நிறைய வகைகளில் முன்னேறியது. ஆனால் 2000ல் இருந்து அந்த நாட்டின் பொருளாதாரம் மோசமானது. அரசின் முடிவுகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருந்தது. இந்த நிலையில் ராணுவம் வந்த ஒரே வாரத்தில் அங்கு பொருளாதாரம் சீராகி இருக்கிறது. மக்களுக்கு எதிரான சட்டங்கள் பல ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
ராணுவத்திற்கு ஆதரவு
இந்த நிலையில் ராணுவத்தின் ஆட்சியை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விரும்ப தொடங்கி உள்ளனர். அதிபர் ஆட்சியில் அளிக்கப்படாத பல சுதந்திரங்கள் ராணுவ ஆட்சியில் அளிக்கப்பட்டு இருக்கிறது. ராணுவ ஆட்சி எதிர்க்கட்சியின் குரலுக்கும் போதிய அளவில் மதிப்பு அளித்து செயல்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையை ராணுவம் அதிரடியாக குறைத்தது. மேலும் அதிபர் நேற்று பதவி விலகுவார் என்றும் கூறப்பட்டது.
கெத்து காட்டிய அதிபர்
இந்த நிலையில் அவர் டிவியில் தோன்றி தன்னுடைய பதவி விலகல் குறித்து அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் டிவியில் "என்னை ராணுவம் கட்டுப்படுத்த வில்லை. இப்போதும் நான்தான் அதிபர். இன்னும் சில நாட்களுக்கு சில முக்கிய காரணங்களுக்காக ராணுவம் இங்கே இருக்கும். அதன்பின் ராணுவம் மீண்டும் வெளியேற்றப்படும். நான் பதவி விலகி மாட்டேன்'' என்று பேசியிருக்கிறார். அந்நாட்டு மக்களுக்கு அதிபரின் முடிவு பெரிய ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது.