’விண்வெளி’ ஆய்வு மையத்தில் யுத்தம்:சர்ச்சைக்குரிய சுயசரிதை நூலை வாபஸ் பெற்ற ‘இஸ்ரோ’ தலைவர் சோம்நாத்!
திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ'வில் தலைவர் பதவிக்கான மோதல்கள், சந்திரயான்- 2 முயற்சி தோல்வி அடைந்தது ஆகியவற்றை மையமாக கொண்ட தமது சுயசரிதை நூலை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திடீரென வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் Nilavu Kudicha Simhangal- நிலவு குடிச்ச சிம்ஹங்கள் (நிலவு ஒளியை குடித்த சிங்கங்கள்) என்ற தலைப்பில் தமது சுயசரிதையை எழுதி உள்ளார். இந்த நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

நம்பிக்கை நூல்: தமது சுயசரிதை நூலானது, துன்பங்களை எதிர்கொள்ளும் போது கனவுகளை, இலக்குகளை அடைவதற்கான உந்துசக்தியாக இருக்கும்; பொறியியல் படிப்பு படிப்பதா? பிஎஸ்சி படிப்பதா? என குழப்பத்தில் இருந்த ஒரு இளைஞன்; பழைய சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற கதை என பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என கூறியிருந்தார் சோம்நாத்.
கே.சிவன் மீது சரமாரி புகார்: இந்த நிலையில் சோம்நாத் தமது புத்தகத்தில், இஸ்ரோ முன்னாள் தலைவரான தமிழ்நாட்டின் கே.சிவன் குறித்து சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தமது பதவி உயர்வுகளுக்கும் இஸ்ரோ தலைவர் பதவிக்கும் கே.சிவன் எப்படி எல்லாம் முட்டுகட்டையாக இருந்தார் என சோம்நாத் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தது பெரும் சர்ச்சைக்குரிய விவாதமானது.
சந்திரயான் - 2 தோல்வி: மேலும் நாட்டின் அதி முக்கியமான விண்வெளி பயணமான சந்திரயான் -2 குறித்த 'உள்ளக’ தகவல்களை பகிரங்கப்படுத்தி இருந்தார் சோமநாத் எனவும் கூறப்பட்டிருந்தது. சந்திரயான் -2 திட்டம் ஏன் தோல்வி அடைந்தது? இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன், இந்த திட்டத்தின் தோல்விக்கு எப்படி காரணமானவர் எனவும் அதில் சோம்நாத் விவரித்திருப்பதாக ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன.
சுயசரிதை திடீர் வாபஸ்: இந்நிலையில் தமது சுயசரிதை நூலாக நிலவு குடிச்ச சிம்ஹங்கள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட இருப்பதாக மலையாள ஊடகம் ஒன்றுக்கு சோம்நாத் தெரிவித்திருக்கிறார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் அறிவியல் துறையின் உயர் அமைப்பான இஸ்ரோவுக்குள் நிகழ்ந்த 'உள்வீட்டு’ விவகாரங்களை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த கிளம்பிய எதிர்ப்பின் காரணமாகவே தமது சுயசரிதை புத்தகத்தை சோம்நாத் வாபஸ் பெறுகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications