ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ30 கோடி நில மோசடி- வருவாய் அலுவலர், வட்டாட்சியர் உட்பட 5 பேர் கைது!
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் - வடகால், பால்தல்லூர் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலர், இரு வட்டாட்சியர்கள், சார்பதிவாளர், நில அளவையர் உள்ளிட்ட உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் மற்றும் பால் நல்லூர் கிராமங்களில், ஒரு தனியார் நிறுவனம் சார்பில் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டது. அந்த தனியார் நிறுவனத்தின் சார்பாக அதன் பங்குதாரர், பொது உபயோகத்திற்காக சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை, ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வழங்கினார்.

மோசடி - போலீசார் விசாரணை
இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நிலங்களை, அந்த தனியார் நிறுவனத்தின் பங்குதாரர் மோசடி செய்து விற்பனை செய்தது தெரிய வந்தது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு 30 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. பொது உபயோகத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தை ரத்து செய்து, அதற்கு சில அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள்
மோசடியில் ஈடுபட்ட தற்போது இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி வரும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், காஞ்சிபுரத்தில் நில எடுப்பு வட்டாட்சியராக பணியாற்றி வரும் வட்டாட்சியர் எழில் வளவன், ஸ்ரீபெரும்புதூர் ஆதி திராவிடர் நலத்துறை வட்டாட்சியரான பி. பார்த்தசாரதி, காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணை பதிவாளராக பணியாற்றி வரும் ராஜதுரை மற்றும் உதவியாளர் பெனடின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மோசடி செய்த இவர்கள் மீது காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தனர்.
உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள், இதுபோன்று, அரசு நிலத்தை மோசடி செய்வதற்கு உடந்தையாக செயல்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications