இங்கே ராஜா.. நேரா ஸ்ரீபெரும்புதூருக்கு வண்டியை விட்ட அண்ணாமலை! டிஆர் பாலுவுக்கு எதிராக பிரச்சாரம்!
காஞ்சிபுரம்: கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுகவையும், டிஆர் பாலுவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுக்க பல்வேறு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கோவை தொகுதியில் திமுக தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் டிஆர்பி ராஜா களமிறக்கப்பட்டுள்ளார். டிஆர்பி ராஜா - அண்ணாமலை இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை மோதல்கள் நிலவி வந்தன. இந்நிலையில், டிஆர்பி ராஜாவின் தந்தை டிஆர் பாலு போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
இன்று ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் அண்ணாமலை. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்ககோரி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "பொய் பேசுபவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கவேண்டும் என்றால் அது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் செய்வோம் என்று கூறி ஏமாற்றி வருகிறார்.
திமுக செய்த சாதனையே 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது மட்டுமே. சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவே தி.மு.க அரசின் சாதனை. நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான். திமுக தமது தேர்தல் வாக்குறுதிகளை 20% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மக்களிடம் பொய் கூறுகிறார்கள்.
திமுக தற்போது நடப்பது கவுன்சிலர் தேர்தல் என்பது போல் பிரச்சாரம் செய்கிறது. அதிமுக மாநில சட்டசபை தேர்தல் போல் பிரச்சாரம் செய்கிறார்கள், மத்தியில் யாரு ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்யவில்லை.
திமுக வெற்றி பெற்றதால் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு மனைவியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 350% சொத்து உயர்ந்துள்ளது. திமுக வென்றால் திமுகவினரின் சொத்து மதிப்பு தான் உயருமே தவிர மக்களின் வாழ்வாதாரம் உயராது” எனப் பேசினார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications