அங்கன்வாடி மையத்தில் அசால்ட்! மண்ணெண்ணெய்யை ஜூஸ் என குடித்த குழந்தைகள்! கதிகலங்கிய காஞ்சிபுரம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே, அங்கன்வாடி மையத்தில், குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, அங்கன்வாடி மைய ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் குழந்தைகளை நல்ல முறையில் பராமரிக்க அரசு சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக புகார் எழுந்தால், ஊழியர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

சுங்குவார்சத்திரம் அங்கன்வாடி மையம்
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே, அங்கன்வாடி மையத்தில், குளிர்பானம் என நினைத்து 3 குழந்தைகள் மண்ணெண்ணையை குடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள செல்வவழிமங்கலத்ததில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

மண்ணெண்ணெய் குடித்த குழந்தைகள்
இந்த மையத்தில், கடந்த 6-ம் தேதி, செல்வவழிமங்கலம், ஜம்போடை தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரது 3 வயது மகன் யோகேஷ், ஒன்றரை வயது மகள் வம்சிகா மற்றும் குமாரசாமி என்பவரின் 2 வயது மகள் பிரியதர்ஷினி ஆகிய 3 குழதைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கன்வாடி மையத்தில் இருந்த பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை, குளிர்பானம் நினைத்து அந்த 3 குழந்தைகளும் குடித்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை
இதுகுறித்து தகவலின் பேரில் அங்கன்வாடி மையத்திற்கு விரைந்து வந்த பெற்றோர், குழந்தைகளை உடனடியாக மீட்டு, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளுக்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிகிறது.

ஊழியர்கள் சஸ்பெண்ட்
இதனிடையே, செல்வவழிமங்கலம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை முறையாக பராமரிக்காத அங்கன்வாடி மைய ஊழியர் சோபா மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரும் கடந்த 7-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications