குடிசை மாற்று வாரிய கட்டுமான பணியில் விபத்து... லிப்ட் அறுந்து விழுந்து என்ஜினியா் உயிரிழப்பு!
காஞ்சிபுரம்: ஶ்ரீபெரும்புத்தூா் அருகே உள்ள சாலமங்கலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்காக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் என்ஜினியா் பரிதாபமாக உயிரிழந்தார்.
கட்டிட தொழிலாளி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்களிப்பு நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு.. தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
இந்த விபத்துக்கான காரணம்? என்ன என்பது குறித்து மணிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிசை மாற்று வாரிய கட்டுமான பணி
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புத்தூா் அடுத்த சாலமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் 420 வீடுகள் 4 தளங்களாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணியை சென்னையில் உள்ள தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்துவருகிறது.
அறுந்து விழுந்த லிப்ட்
அந்த கட்டிடத்தில் கட்டுமான பொருட்களை 4-வது தளத்திற்கு எடுத்து செல்வதற்காக தற்காலிக லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கட்டுமான பணிகள் வழக்கம்போல் நடந்தது. அப்போது கட்டுமானப் பொருட்களுடன் 4-வது தளம் நோக்கி சென்ற லிப்ட் எதிர்பாராதவிதமாக திடீரென அறுந்து விழுந்தது.
இருவர் இடிபாடுகளில் சிக்கினர்
அங்கு பணியில் இருந்த திருக் கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த சைட் என்ஜினியா் வேதகிரி (வயது 26) கட்டிடத் தொழிலாளி அய்யனாா்(39) ஆகியோா் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீசாா் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்தனர். இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
என்ஜினியா் உயிரிழப்பு
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சைட் என்ஜினியா் வேதகிரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். அய்யனாா் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மணிமங்கலம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்துக்கான காரணம்? என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.