மாமல்லபுரம் கிளம்பி போறீங்களா.. அங்க வானத்தில் "மீன் பறக்குதே"..அதென்ன நைலான்ல.. தமிழ்நாடு அரசு வாவ்
காஞ்சிபுரம்: மாமல்லபுரமே பிஸியாகி கொண்டிருக்கிறது.. விரைவில் திருவிழா நடக்க உள்ளதால், இதற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. அதென்ன திருவிழா?
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்... குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடந்து வருகிறது.
அந்தவகையில், கடந்த வருடம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்த மாமல்லபுரத்தில், சர்வதேச பட்டம் விடும் திருவிழா ஆரம்பமானது.

சிறப்பு குழுக்கள்: தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில், கடந்த வருடம் "சர்வதேச பட்டம் விடும் திருவிழா" நடத்தப்பட்டது.. முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த திருவிழாவில், அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா உள்பட உலகம் முழுவதும் இருந்து சுமார் 100 நாடுகளிலிருந்து பட்டம் விடும் குழுக்கள் பங்கேற்றிருந்தன.
விலங்குகள்: இந்த பட்ட திருவிழாவில் பல்வேறு விலங்குகள், மீன்கள், பறவைகள் போன்றவை பலூன் வடிவில் பட்டங்களாக பறக்கவிடப்பட்டன.. மேலும், சுற்றுலா துறைக்கு சொந்தமான கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் இந்த விழாவுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்கப்பட்டதால், பெரும்பாலான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.. இந்த திருவிழாவின்போது இசைக்கச்சேரிகள், உணவு திருவிழா போன்றவையும் சேர்ந்தே நடைபெறுவது வழக்கம்..
இந்த விழாவுக்கு வயது வரம்பு எதுவும் இல்லாததால், பொதுமக்களுக்கு இது சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழ்ந்தது.. இந்நிலையில், 2வது வருட திருவிழாவுக்கும் மாமல்லபுரம் தயாராகி விட்டது.. மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடர்ந்து 2வது ஆண்டாக நடைபெற உள்ளது...

அறிவிப்பு வந்தாச்சு: இந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழா, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 12 முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கலைஞர்கள் கலந்துகொள்ள போகிறார்கள்.. வெளிநாடுகளில் நடப்பதை போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலானில் பட்டங்கள் பறக்க விடப்பட உள்ளன.
டிராகன், யானை, குதிரை போன்ற உருவங்கள், இடம்பெற உள்ளது.. இதைத்தவிர, சிறுவர்களை கவரும் கார்ட்டூன் கேரக்டர்கள் உள்ளிட்ட பட்டங்கள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்..
கட்டணம் நிர்ணயம்: குழந்தைகள் முதல் பெரியவர்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் 4 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பெரியவர்களுக்கு ரூ. 150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடத்தை போலவே, இந்த முறையும் இசைக்கச்சேரிகள், உணவு திருவிழா நடைபெறும் என்றும், பொதுமக்களுக்கு இது சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழும் எனவும் சுற்றுலாதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராசூட்கள்: அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் நடப்பதைப் போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலான் மெட்டிரியலில் இந்தக் காற்றாடிகள் பறக்க விடப்பட உள்ளதாக சொல்கிறார்கள்.. அதேசமயம், 3 அடி முதல் சுமார் 20 அடி வரையிலான காற்றாடிகள் பறக்கவிடப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications