மகிழ்ச்சியில்.. சிறு பிழை செய்து விட்டேன்.. பேசி முடித்து திரும்பவும் பேசிய முதல்வர்.. என்னாச்சு?
காஞ்சிபுரம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்த மகிழ்ச்சியில் சிறு பிழை செய்து விட்டேன் என்று சொல்லி முதல்வர் ஸ்டாலின் விழா மேடையில் மீண்டும் பேசி விளக்கம் அளித்தார்.
காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாளான இன்றைய தினம் இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் முதல்வர் ஸ்டாலின். திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு அரசு செய்த சாதனைகளை, திட்டங்களைப் பட்டியலிட்டு பேசினார் முதல்வர்.

தனது வாழ்க்கையில் வெற்றிக்கு காரணமாக இருக்கும் தாயார் தயாளு அம்மாள், மனைவி துர்கா, மகள் செந்தாமரை பற்றி பெருமையாகவும் பெருமிதத்தோடும் பேசினார். மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். 2 ஆண்டுகளுக்கு ரூ.12 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்று கூறினார். ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் எந்த அளவிற்கு பாடுபடுகிறார்கள் என்று பேசினார்.
மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படும் வரை ஸ்டாலின் ஆட்சிதான் நடைபெறும் என்று மிகவும் பெருமையாகவும் பேசினார். என் அருமை சகோதரிகளே உங்கள் சகோதரன் நிறைவாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி இது. உங்கள் கவலைகளை போக்கும் ஆட்சி இது. தொல்லை இனி இல்லை. வானமே உங்கள் எல்லை நன்றி வணக்கம் என்று கூறி முடித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போது ஒரு அதிகாரி ஓடி வந்து ஒரு துண்டு சீட்டு கொடுத்தார். அதைப்பார்த்த முதல்வர் ஸ்டாலின், தோழர்களே.. நண்பர்களே.. சகோதரிகளே.. நான் ஒரு சிறு பிழை செய்து விட்டேன். இந்த திட்டத்தின் நோக்கம் 2 ஆண்டுகளுக்கு ரூ. 12ஆயிரம் கிடைக்கும் என்று கூறினேன். இதனை யாரும் 2 ஆண்டுக்கு 12 ஆயிரம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். மாதம் 1000 ரூபாய் என ஆண்டுகளுக்கு ரூ. 12 ஆயிரம் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும் நான் அளவு கடந்த மகிழ்ச்சியில் கொஞ்சம் தடுமாறிப்போய் 2 ஆண்டுகளுக்கு ரூ. 12ஆயிரம் என்று சொல்லி விட்டேன் தயவு செய்து அதை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு விடை பெற்றார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications