வகுப்பறையை மது பாராக்கிய மாணவிகள்... கொத்தாக தூக்கிய காஞ்சிபுரம் கல்லூரி நிர்வாகம்
காஞ்சிபுரம்: வகுப்பறையில் மாணவிகள் கும்பலாக குளிர்பான பாட்டிலில் மதுபானம் கலந்து அருந்தும் வீடியோ வைரலான நிலையில் அவர்களை இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஏனாத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கல்லூரியின் வகுப்பறை ஒன்றில் மேஜை மீது அமர்ந்தபடி 10 க்கும் மேற்பட்ட மாணவிகள் கும்பலாக அமர்ந்து வெளி மாநிலங்களில் விற்கப்படும் பாக்கெட் மதுவை குளிர்பானத்தில் கலந்து பருகும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக அதிகளவில் பகிரப்பட்டு வந்த இந்த வீடியோ கல்லூரி முதல்வரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து வீடியோவில் மது அருந்திய மாணவிகள் யார் என கண்டறிந்து அவர்களை அழைத்து முதல்வர் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது மாணவிகள் அனைவரும் முதலாமாண்டு படிப்பவர்கள் என்பது தெரியவந்தது. தங்களுடன் வகுப்பில் ஒன்றாக படிக்கும் மாணவன் மது பானத்தை வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்த மாணவிகள், மது என்று தெரிந்த பிறகே அதை அருந்தியதாக ஒப்புக்கொண்டனர். அப்போது அவர்களுக்குள்ளே விளையாட்டாக எடுத்த வீடியோதான் தற்போது அவர்களுக்கு வினையாக முடிந்திருப்பதும் தெரியவந்தது.
அனைத்து விளக்கங்களையும் கேட்டறிந்த பின்னர் கல்லூரி வகுப்பறையில் மது அருந்திய 10 க்கும் மேற்பட்ட மாணவிகளை உடனடியாக இடைநீக்கம் செய்து முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார். அத்துடன் மாணவிகளின் பெற்றோரை கல்லூரிக்கு வர சொன்ன முதல்வர், இனி இதுபோன்ற சம்பவம் நடந்தால் இதைவிட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications