காஞ்சிபுரம் மேயருக்கும் சிக்கல்.. போர்க்கொடி தூக்கிய கவுன்சிலர்கள்.. 29-ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி 33 கவுன்சிலர்கள் மாநகராட்சி கமிஷனர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தனர். இந்த நிலையில், வரும் 29 ஆம் தேதி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என்று மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் மகாலட்சுமி யுவராஜ். இவர் நகராட்சியாக இருந்த காஞ்சிபுரம், மாநகராட்சியாக மாறிய பின் முதல் மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு பதவியேற்றார். மொத்தமுள்ள 51 இடங்களில் பெரும்பாண்மை பெற்று திமுக சார்பில் மகாலட்சுமி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்: அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் சிலர் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர். எனினும் பெரிய அளவில் இந்த விவகாரம் மாறவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திமுகவை சேர்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பினர். திமுக கவுன்சிலர்கள் அனைவருக்கும் ஒரே போல மரியாதை கொடுப்பதில்லை, அவர்களுடைய வார்டுகளுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன.
இதையடுத்து இது தொடர்பாக கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்தனர். அவரும் இரு தரப்பினையும் சமாதனாப்படுத்தினார். இந்த நிலையில் எதிர்க்கட்சி கவுன்சிலர்களுடன் சேர்ந்து மொத்தம் 33 கவுன்சிலர்கள் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக மாமன்ற கூட்டத்தில் புகார் செய்தனர். இதனால் மாமன்ற கூட்டம் சரிவர நடக்காமல் இருந்தது.
29 ஆம் தேதி வாக்கெடுப்பு: இந்த நிலையில் 33 கவுன்சிலர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் மற்றும் மாவட்ட செயலாளரிடம் நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மனு அளித்தனர். இதையடுத்து, வரும் 29 ஆம் தேதி காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
வரும் 29 ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் மகாலட்சுமி யுவராஜ் பெரும்பான்மையை நிரூபித்தால் மேயராக தொடர முடியும். இதனை அனைத்து கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் அனுப்பி வைத்துள்ளார்.
நெல்லை, கோவை மேயர்கள்: கடந்த சில தினங்களுக்கு முன்பாக நெல்லை, கோவை மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 96 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. கோவை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 19வது வார்டு கவுன்சிலரான கல்பனா ஆனந்தகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களுடன் தொடர்ந்து மோதல் போக்குடன் நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன. இதனால், மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்களே மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிகழ்வும் நடந்தது. மேலும், டெண்டர், கமிஷன் விவகாரங்கள் தொடர்பாகவும் திமுக கவுன்சிலர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இத்தகைய சூழலில் தான் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திமுக சரவணன்: அதேபோல, நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவைச் சேர்ந்த சரவணனுக்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் இடையே கடும் எதிர்ப்பு இருனந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர்கள் 38 பேர் மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையரிடம் மனு அளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக, கோவை மற்றும் நெல்லை மாநகராட்சியில் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே பூசல் இருந்து வந்தது. இதையடுத்து தான், கட்சி் தலைமை, கோவை மேயர் கல்பனாவையும், நெல்லை மேயர் சரவணனையும் ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இதன்பிறகே இருவரும் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications